Published : 29 Apr 2024 11:08 AM
Last Updated : 29 Apr 2024 11:08 AM

சென்னை ஆவடியை உறைய வைத்த இரட்டைக் கொலை: சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

கொலையான தம்பதி - இடப் பக்கம்

சென்னை: சென்னை ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மிட்டனமல்லி பகுதியில் சிவன் நாயர் என்பவர் மனைவி பிரசன்ன குமாரியுடன் வசித்து வந்தார். இருவரும் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள். சிவன் நாயர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவரின் மனைவி பிரசன்ன குமாரியோ மத்திய அரசின் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஓய்வு பெற்ற ராணுவ வீரராக இருந்தாலும் வீட்டிலேயே சித்த மருத்துவமும் பார்த்து வந்துள்ளார் சிவன் நாயர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்களின் மகன் ஹரி ஓம் ஸ்ரீ அன்னனூரில் சித்த மருத்துவ கிளினிக் நடத்துகிறார். மகளோ ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை மகன் ஹரி ஓம் ஸ்ரீ வெளியே சென்றிருந்த வேளையில் சிகிச்சை பார்ப்பது போல வந்த சிலர் சிவன் நாயர் மற்றும் பிரசன்ன குமாரியை கொடூரமாக கொலை சென்று தப்பிச் சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலின்பேரில் போலீஸார் இருவரின் உடலையும் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீஸார் நேற்றிரவில் இருந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் சம்பவ பகுதியை நேரில் ஆய்வு செய்து விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். முதல்கட்டமாக சிவன் நாயர் வீட்டில் நகைகள் ஏதேனும் கொள்ளை அடைக்கப்பட்டுள்ளதா, கொள்ளை அடிக்கும் நோக்கில் இந்த இரட்டை கொலை நிகழ்ந்துள்ளதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மத்திய அரசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகமாக வசித்து வரும் பகுதி மிட்டனமல்லி. இந்தப் பகுதியில் நடந்துள்ள இரட்டை கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநில நபர் கைது?: இதற்கிடையே, இந்த இரட்டை கொலை சம்பவத்தில் வடமாநில நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலை நடைபெற்ற இடத்தில் கைப்பற்றப்பட்ட செல்போனின் அடிப்படையில் மகேஷ் என்ற அந்த வடமாநில இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் வளசரவாக்கத்தில் பணிபுரிந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

இவரின் செல்போன் எப்படி, கொலை நடந்த இடத்தில் கிடைத்தது எப்படி என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x