Published : 31 Dec 2023 04:00 AM
Last Updated : 31 Dec 2023 04:00 AM

கானாத்தூரில் கடலில் மூழ்கி தி.நகரை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு: போலீஸார் விசாரணை

நவீன், மானஸ், பிரசாந்த், சிவதாணு

கானாத்தூர்: கடலில் குளித்தபோது அலை இழுத்து சென்ற 5 பேரில் இருவரது உடல்கள் நேற்று கரை ஒதுங்கியுள்ள நிலையில், மாயமான இருவரது உடல்கள் மீட்கப்பட்டன.

சென்னை, தி.நகரை சேர்ந்தவர் சிவதாணு ( 46 ), இவர் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் 20 பேர் பணி புரிகின்றனர். புத்தாண்டை கொண்டாடும் வகையில் ஊழியர்கள் அனைவரும் நேற்று முன் தினம் கானாத்தூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு சென்று தங்கினர். பின்னர் மாலை கானாத்தூரில் தடை செய்யப்பட்ட பகுதியில் நண்பர்கள் குளித்து விளையாடிய போது நவீன் ( 26 ), மானஸ் ( 18 ), பிரசாந்த் ( 18 ), நிவேதிதா ( 18 ) ஆகிய நான்கு பேர் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.

அப்போது மகளை காப்பாற்ற சென்ற சிவதாணு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இதில் சிறிது நேரத்தில் நிவேதிதா உயிருடன் கரை ஒதுங்கினார். அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் அப் பகுதி மீனவர்கள் உதவியுடன் கடலில் மாயமான 4 பேரையும் போலீஸார் தேடினர். இதில் சிவதாணு, நவீன் ஆகியோர் இறந்த நிலையில் நேற்று முன் தினம் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கானாத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கடலில் மூழ்கி மாயமான பிரசாந்த், மானஸ் ஆகியோரை தேடி வந்த நிலையில் நேற்று கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் உடல்களை மீட்டனர். இதைத் தொடர்ந்து உடல்களை கானாத்தூர் போலீஸார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x