Published : 29 Dec 2023 04:10 AM
Last Updated : 29 Dec 2023 04:10 AM

தி.மலையில் பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்: திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்கு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கிய திமுக மாநில நிர்வாகி, அவரது மனைவி, கோயில் ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது, விஐபி என்ற பெயரில் திமுக தலைமைச் செயற் குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், அவரது மனைவி சிவசங்கரி ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர். மூலவரை வழிபட்ட இவர்கள், உண்ணாமுலை அம்மன் சந்நிதியில் தரிசனம் செய்துள்ளனர். அப்போது கருவறை முன்பு நின்றுகொண்டு பல நிமிடங்கள் தரிசனம் செய்துள்ளனர். இதனால், அடுத்தடுத்த தரிசன மேடைகளில் நின்றிருந்த பக்தர்களால், அம்மனை வழிபட முடியவில்லை.

இது குறித்து, அம்மன் சந்நிதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் காந்திமதியிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து, பக்தர்களுக்கு இடையூறாக இருந்த இரா.ஸ்ரீதரன், அவரது மனைவி சிவசங்கரி ஆகியோரை, பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் சற்று ஒதுங்கி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதற்குக் கணவன், மனைவி இருவரும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

பக்தர்கள் அதிர்ச்சி: மேலும், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தத்தின் தம்பி குடும்பத்தினர் என்றும், திருவண்ணாமலை நகராட்சியின் முன்னாள் தலைவர் என்றும், திமுகவின் முக்கிய பிரமுகர் எனக் கூறி, நகர முடியாது எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு ஆதரவாகக் கோயில் ஊழியர் ரமேஷ் செயல்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் காந்திமதி கண்டிப்பு காட்டியதால், ஆத்திர மடைந்து அவரை தாக்கிய தாகக் கூறப்படுகிறது.

இதைப் பார்த்த பக்தர்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது, அவருடன் சென்ற மற்றொரு விஐபி ஒதுங்கிக் கொண்டுள்ளார். இது குறித்து காவல் ஆய்வாளர் காந்தி மதி கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை நகரக் காவல் துறையினர் அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, பெண் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், அவரது மனைவி சிவசங்கரி, கோயில் ஊழியர் ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை, காவல் துணைக் கண் காணிப்பாளர் குணசேகரன் கைப் பற்றியுள்ளார். திமுக-வின் முக்கிய பிரமுகர் என்பதால், வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க உள்ளூர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x