Published : 14 Aug 2023 06:24 AM
Last Updated : 14 Aug 2023 06:24 AM

ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் வீட்டில் 100 பவுன் நகை, பணம் திருட்டு: தப்பி ஓடிய உறவினரை பிடிக்க கடலூர் விரைந்தது தனிப்படை

சென்னை: சென்னை அடையாறு, இந்திராநகர், 5-வது குறுக்கு தெருவைச்சேர்ந்தவர் கனகராஜ் (76). சென்னைஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஞானமணி (72). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. முதுமை காரணமாக இவர்கள், தங்களை பார்த்துக்கொள்ள, கடலூரைச் சேர்ந்த தனது உறவினர் கனகசண்முகம் என்பவரை வேலைக்கு அமர்த்தினர். அவருக்கு மாதம்ரூ.30 ஆயிரம் ஊதியம் தரப்பட்டது.

இந்நிலையில், முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் கனகராஜ் காலமானார். இதனால், ஞானமணி தேவையான அனைத்து விதமான உதவிகளையும் கனகசண்முகம் செய்து வந்தார். இந்நிலையில், அவர் வேலையிலிருந்து திடீரென நின்றுவிட்டார். அவரது நடவடிக்கையால் சந்தேகப்பட்ட ஞானமணி வீட்டு பீரோவில் இருந்த நகைகளை சோதித்துப் பார்த்தார்.

அப்போது, பீரோவிலிருந்த சுமார் 100 பவுனுக்கு மேலான தங்கநகைகள், ரூ.3 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. வெளியாட்கள் யாரும் வீட்டுக்குள் வந்துபோன தடயங்கள் ஏதும் இல்லை. எனவே, வேலையில் இருந்து திடீரென நின்ற கனகசண்முகம் மீது ஞானமணிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து அடையாறு போலீஸில் ஞானமணி புகார் அளித்துள்ளார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவாக உள்ள கனகசண்முகத்தை கைது செய்ய தனிப்படை போலீஸார் கடலூருக்கு விரைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x