Published : 13 Jul 2023 04:00 AM
Last Updated : 13 Jul 2023 04:00 AM

கோவை | சிறுவனை கொன்றதாக உறவுக்கார பெண் கைது

கோவை: கோவை அருகே, 7 வயது சிறுவனை கொன்றதாக உறவுக்கார பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (28). இவரது மனைவி ஹைருன் நிஷா (26). இவர்களது மகன் ஹைருல் இஸ்லாம் (7). கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் குடும்பத்துடன் ஜாகீர் உசேன் கோவை வந்தார். சூலூர் அருகேயுள்ள சின்ன கலங்கல் பகுதியில் தங்கியிருந்து, நூற்பாலையில் கணவனும், மனைவியும் வேலை செய்து வந்தனர்.

இவர்கள் வேலைக்கு செல்லும் சமயத்தில் மகன் ஹைருல் இஸ்லாம் மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். நேற்று முன்தினம் வழக்கம் போல இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டு, மதியம் வீட்டுக்கு வந்தபோது, மகன் வீட்டில் இல்லை. இது குறித்து சூலூர் போலீஸில் புகார் அளித்தனர். இந்நிலையில், வீட்டருகே உள்ள புதர் பகுதியில் சிறுவன் ஹைருல் இஸ்லாம் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில் சிறுவனுடைய தந்தையின் சகோதரியான (அத்தை) நூர்ஜா ஹாதுன்(29) மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து விசாரித்தனர். ஏற்கெனவே சிறுவனின் தாய்க்கும், நூர்ஜா ஹாதூனுக்கும் மில்லில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் சிறுவனை கழுத்தை நெரித்து அவர் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, நூர்ஜா ஹாதூனை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x