Published : 29 Dec 2022 03:50 AM
Last Updated : 29 Dec 2022 03:50 AM

டிஆர்பி தேர்வு அட்டவணை வெளியீடு: மே மாதத்தில் இடைநிலை ஆசிரியர் தேர்வு

சென்னை: அடுத்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இதன்மூலம் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள் உட்பட 15,149 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டுக்கான தேர்வுக்கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நேற்று மாலை இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டது. அதில் மொத்தம் 9 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள் உட்பட 15,149 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஏப்ரலில் போட்டித்தேர்வு நடத்தப்பட உள்ளது.

வட்டாரக் கல்வி அலுவலர் பதவியில் 23 காலியிடங்களை நிரப்ப பிப்ரவரியில் அறிவிப்பு வெளியாகும். அதற்கான போட்டித் தேர்வு மே மாதம் நடைபெறும். இடைநிலை ஆசிரியர் பதவியில் 6,553 காலியிடங்களுக்கு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மே மாதம் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதேபோல், பட்டதாரி ஆசிரியர் பதவியில் 3,587 காலியிடங்களை நிரப்புவதற்காக ஏப்ரலில் அறிவிப்பு வெளியாகும். தேர்வு ஜுனில் நடைபெறும்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு ஆகஸ்ட் மாதமும், அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு செப்டம்பரிலும், அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு அக்டோபரிலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நவம்பரிலும் நடைபெற உள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1 மற்றும் தாள்-2) டிசம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பாசிரியர்கள் ஏமாற்றம்: தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு தேர்வுக்கால அட்டவணையில் இடம்பெறாததால் அத்தேர்வை எதிர்பார்த்து காத்திருந்த சிறப்பாசிரியர் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x