Published : 12 Jan 2023 04:07 AM
Last Updated : 12 Jan 2023 04:07 AM

ஏற்றுமதி சலுகை விகிதம் அதிகரிப்பு: மத்திய அரசுக்கு ‘சைமா’ நன்றி

பிரதிதிநித்துவப் படம்

கோவை: பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள பின்னலாடை துணி ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி சலுகை விகிதத்தை உயர்த்தியுள்ள மத்திய அரசின் நடவடிக்கை பொங்கல் பரிசாக அமைந்துள்ளது என தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் மீதான மறைமுக வரிகளை நீக்கும் திட்டத்தை (ஆர்ஓடிடிஇபி) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. முன்னதாக அரசு ஆர்ஓஎஸ்சிடிஎல் என்ற சலுகை திட்டத்தை 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வராத இதர ஜவுளி பொருட்கள் அனைத்தும் தொழில்துறையினரால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உரிய சலுகைகளுடன் ஆர்ஓடிடிஇபி திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டன. இவ்விரு திட்டங்களில் ஏற்றுமதி சலுகைகள் உயர்த்தப்பட்டுள்ளதால் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் உலகளாவிய போட்டித் தன்மை மேம்படும்.

செயற்கை இழைகள், நூல்கள், துணிகள், பருத்தி பின்னலாடை துணிகள் உள்ளிட்ட சில ஜவுளிப்பொருட்களுக்கு 2021 ஜனவரி முதல் சலுகைகள் நடைமுறைக்கு வந்தன. தற்போது ஆர்ஓடிடிஇபி கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு, அத்தகைய அனைத்து தகுதியான பொருட்களுக்கும் ஏற்றுமதி சலுகை விகிதத்தை அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கையை மேற்கொண்ட பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்கோயல் உள்ளிட்டோருக்கு நன்றி.

2023 ஜனவரி 16ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஏற்றுமதி செய்யப்பட உள்ள ஜவுளிப்பொருட்களுக்கு புதிய ஏற்றுமதி சலுகை விகிதங்கள் பொருந்தும். இது உலகளாவிய பொருளாதார சுணக்க நிலை மற்றும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துவரும் பின்னலாடை துணி ஏற்றுமதியாளர்களுக்கு பொங்கல் பரிசாக அமைந்துள்ளது. இதனால் இந்திய ஜவுளிப்பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும். இந்திய ஜவுளித் துறையின் உலகளாவிய போட்டித்திறன் மேம்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x