Published : 11 Jan 2023 04:17 AM
Last Updated : 11 Jan 2023 04:17 AM

திண்டுக்கல்லில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் பறக்கும் கரும்பு, மஞ்சள் கொத்து

பிரதிநிதித்துவப் படம்

திண்டுக்கல்: வெளிநாடு வாழ் தமிழர்கள் பொங்கல் கொண்டாட திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கரும்பு, மஞ்சள் கொத்து அனுப்பப்படுகிறது.

வெளிநாடு வாழ் தமிழர்கள் பாரம்பரிய விழாவான பொங்கலை ஆர்வத்தோடு கொண்டாடி வருகின்றனர். அதற்கு தேவையான கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றை இங்கிருந்து பெற வேண்டிய நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கரும்பு, பொங்கல் பானையில் கட்டுவதற்கு மஞ்சள் கொத்து ஆகியவை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு நிலக்கோட்டை பகுதியில் வழக்கமாக தினமும் பூக்களை சிங்கப்பூர், துபாய்க்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள், சீசன் வியாபாரமாக கரும்பை கொள்முதல் செய்து கண்டெய்னர் மூலம் கப்பலில் துபாய்க்கு 60 டன் கரும்பை ஏற்றுமதி செய்தனர். இதையடுத்து கூடுதல் ஆர்டர் கிடைத்ததால் தற்போது பொங்கலுக்கு சில தினங்களே உள்ளநிலையில் கப்பலில் சென்றால் தாமதம் ஆகும் என்பதால் விமானத்தில் கரும்பு அனுப்பி வைக்கப்படுகிறது.

திண்டுக்கல் அருகே கூவனூத்தைச் சேர்ந்த விவசாயி சின்ராஜ், தனது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் கரும்பு மற்றும் 2 ஏக்கரில் மஞ்சள் பயிரிட்டிருந்தார். தற்போது அறுவடை நடந்துவரும்நிலையில், கரும்பை தோகையை நீக்கி , நீள துண்டுகளாக வெட்டி அட்டைப் பெட்டியில் அடைத்து பார்சலாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறார்.

திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு கரும்பு மற்றும் மஞ்சள் கொத்துகள் அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு ரயில் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து திருச்சி விமான நிலையம் சென்று விமானம் மூலம் லண்டன், பாரீஸ், துபாய்க்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இது குறித்து விவசாயி சின்ராஜ் கூறியதாவது: கடந்த ஆண்டும் வெளிநாடுகளுக்கு கரும்பு ஏற்றுமதி செய்தேன். தொடர்ந்து இந்த ஆண்டும் ஆர்டர்கள் கிடைத்ததால் ஏற்றுமதி செய்கிறேன். கரும்புத் தோகையை அகற்றி நீள துண்டுகளாக வெட்டி பத்து கிலோ கரும்பு துண்டுகளை ஒரு பெட்டியில் அடைத்து அனுப்புகிறோம்.

தோகையுடன் கரும்பு வாங்க விரும்புபவர்களுக்கு தோகையுடன் சேர்த்து கரும்பை அனுப்புகிறோம். இத்துடன் மஞ்சள் கொத்துகளையும் அனுப்புகிறேன். விமானத்தில் இடம் கிடைப்பதை பொறுத்து சில நாட்களாக தினமும் 500 கிலோ கரும்பை அனுப்பி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x