சிறப்பு பலன்கள்

குரு பெயர்ச்சி 2026 பொதுப் பலன்கள்

02.06.2026 முதல் 26.06.2027 வரை

முனைவர் கே.பி.வித்யாதரன்

ஆசிரியரை தெய்வமாக நினைத்து அவரின் வழிகாட்டுதலின்படி படித்து சாதிக்கும் மாணவர் எல்லாம் குரு பகவானின் அம்சத்தில் வந்தவர்கள் தான். ஊருக்கே அச்சுறுத்தல்கள் இருந்தாலும் பொய் வழக்குகள் போட்டு வாட்டி வதைத்தாலும் உண்மையை ஊருக்கே உரக்கச் சொல்லும் உத்தமர்களின் உள் மனதில் உட்கார்ந்து இருப்பவர் இந்த குரு பகவான் தான்.

உமிழ் நீரை கூட விழுங்காமல் இறைவனின் திருநாமத்தை இடைவிடாமல் உச்சரித்துக் கொண்டு கடும் விரதம் இருந்து கடவுளை காண முயல்பவர்களுக்கு பலம் தருபவர் குரு பகவான் தான்.

வருமானத்தை மறைக்காமல் அரசுக்கு சரியாக வருமான வரி செலுத்துவோரின் நேர்மைக்குள் நிற்பவர் இந்த குரு பகவான் தான். விளையாட்டு மைதானத்தில் எதிரணியை வெல்லும் போதெல்லாம் தன் தாய் நாட்டின் தேசிய கொடியை கைகளில் ஏந்தி நிற்கும் விளையாட்டு வீரனின் நாட்டுப்பற்றுக்குள் நாற்று விட்டு வளர்ப்பவர் இந்தக் குரு பகவான் தான்.

எங்கெல்லாம் ஒழுக்கம், மனிதாபிமானம்,தெய்வீகம் நிறைந்து இருக்கிறதோ அங்கெல்லாம் குருபகவான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என அர்த்தம். அள்ள அள்ளக் குறையாத தனம், தானியம், சம்பத்தெல்லாம் அவர் அருளிருந்தால் நமக்கு கிடைக்கும். நாட்டுப் பற்றுடன் நாட்டை காப்பாற்ற நல்ல பிள்ளையை ஒருவர் பெற்றெடுக்கிறார் என்றால் அவரும் குருபகவானின் ஆசீர்வாதத்தில் இருக்கிறார் என அர்த்தம்.

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மலர் போல் கடக ராசியில் உச்சம் பெற்று உயிர்களை உய்விக்க வந்துவிட்டார் பிரகஸ்பதியாகிய வியாழ பகவான். மீண்டும் விவசாயத்தை நோக்கி உலக மக்களின் பார்வை திரும்பும். விவசாயிகள் முக்கியத்துவம் பெறுவர். அவர்களுக்கு சலுகைகளும் கிடைக்கும். சந்திரனின் வீட்டில் குரு அமைவதால் சந்திரனின் இரண்டாம் எண் முக்கியத்துவம் பெறும், நாடெங்கும் பெண்கள் அதிகார பதவிகளில் அமர்வார்கள். கூட்டுக் குடும்பம், பாரம்பரிய உணவுகளுக்கு மரியாதை திரும்பும்.

வாகன உற்பத்தி அதிகரிக்கும். வாகனங்களின் விலைகுறையும்.தண்ணீர் மற்றும் சூரியசக்தியால் இயங்கும் வாகனங்கள் அறிமுகமாகும். தீர்க்கவே முடியாது என நினைத்திருந்த நோய்களுக்கு (கேன்சர்) மருந்து கண்டுபிடிக்கப்படும். மூப்பு திரையிலிருந்து விடுபட்டு தீர்க்காயுசுடன் வாழ வழிவகுக்கும் மருந்துகள் அறிமுகமாகும். மக்களிடையே மனமகிழ்ச்சி அதிகரிக்கும். காலப் புருஷ தத்துவத்துக்கு 4-ம் வீட்டில் குரு அமர்வதால் சொந்தவீடு எல்லோருக்கும் அமையும்.

குரு பகவான் விருச்சிக ராசியை பார்ப்பதால் அறிவியல், இயற்பியல் மற்றும் வானவியல் கண்டுபிடிப்புகள் பிரமிக்க வைக்கும். ஆராய்ச்சி மாணவர்களுக்கு பொற்காலமாகும். நாடுகளிடையே மூண்டு வரும் எல்லைப் பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வரும். ஆறு, ஏரி, கடல் சார்ந்து நிலவும் சண்டைகள் தீரும். கப்பல் போக்குவரத்து அதிகரிக்கும்.

நீரால் சூழ்ந்த நிலப்பகுதி வீடான மகர ராசியை குரு பகவான் பார்ப்பதால் தீவுகள், தீபகற்பங்கள் செழிப்படையும். கடற்கரை மற்றும் ஆற்றங்கரை நகரங்கள், நாடுகள் வளர்ச்சியடைந்து நவீனமாகும். புது தொழிற்சாலைகள், தொழில் நகரங்கள் அமையும். அரசியல்வாதிகளின் கை ஓங்கும்.

குருபகவான் மீன ராசியை பார்ப்பதால் கப்பல் கட்டும் தொழில் மற்றும் மீன்பிடி தொழில் வளர்ச்சியடையும். பெட்ரோல், டீசல் விலை ஏறும். எண்ணெய் உற்பத்தி அதிகமாகும். தங்கத்தின் விலை உயரும். 31.10.2026 முதல் 06.12.2026 வரை குருவும், கேதுவும் சேர்வதால் ஒரு மாதத்துக்குள் பிரிவுகள் ஏற்பட்டு சண்டைகள் வரும்.

நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் குருபகவான் சிம்மத்தில் அமர்வதால் பொருளாதார மந்தநிலையும், தொற்று நோயும் அதிகரிக்கும். மீண்டும் கடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எழுந்து எரிபொருள் எண்ணெய் விலை உயர்வு, மருந்து தட்டுப்பாடுகள் ஏற்படும். பழ வகைகள் மற்றும் தங்கம் விலை குறைந்து உயரும்.

பணத் தட்டுப்பாடு மற்றும் தீ விபத்துகள் அதிகரிக்கலாம். சர்க்கரை அரிசி விலை குறையும். மூத்த அரசியல் தலைவர்கள் தங்களின் வாரிசுகளுக்கு முடிசூட்டுவர். ஆலமரமாக இருந்து கோலோங்கிய சிலர் அரசியலை விட்டு விலகுவர்.

சந்திரன், செவ்வாய் கிரகங்களை நோக்கி புதிய செயற்கைக் கோள்களை இந்தியா ஏவும். ராணுவத்தில் பொறியியல் பட்டதாரிகள் வேலையில் அமர்த்தப்படுவர். கிமி ஆதிக்கம் ஓங்கும். குருவுக்கு 8-ல் சனி நிற்பதால் வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம் வந்து விலகும்.

இந்த குருப் பெயர்ச்சியால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். நீண்ட காலமாக திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் முடியும். அதேபோல் குழந்தை பாக்கியமும் கிடைக்கும். குடும்பத் தொழில் மற்றும் தந்தையாரின் தொழிலுக்கு இளைஞர்கள் திரும்புவர். நகரங்களை ஒட்டி இருக்கும் பகுதிகள் விரைந்து வளரும். மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி பயம் கலந்த சந்தோஷத்தை தருவதாக அமையும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT