Published : 10 Nov 2020 12:33 PM
Last Updated : 10 Nov 2020 12:33 PM

சீனாவின் கரோனா தடுப்பு மருந்தால் பக்க விளைவுகள்: பரிசோதனையை நிறுத்திய பிரேசில்

சீனாவின் கரோனா தடுப்பு மருந்தைப் பயன்படுத்தியதில் பக்க விளைவுகள் ஏற்பட்டதன் காரணமாக அதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக பிரேசில் தெரிவித்துள்ளது.

சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான சினோபார்ம் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சீனாவின் கரோனா தடுப்பு மருந்துகள் பிரேசிலில் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் பக்க விளைவுகள் ஏற்பட்டன. இதனால் மனிதர்கள் மீது நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பக்க விளைவுகள் குறித்து தற்போது விரிவாகக் கூற இயலாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனைகளின் இறுதிக் கட்டத்தில் சீனாவில் நான்கு கோவிட் -19 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தடுப்பூசிகள், ஏற்கெனவே ஜூலை மாதம் தொடங்கப்பட்ட அவசரகாலப் பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதலில் அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிலையில் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து இந்த மாதம் கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் முதலில் தோன்றிய கரோனா வைரஸுக்கு இன்று உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x