Published : 06 Sep 2015 12:22 PM
Last Updated : 06 Sep 2015 12:22 PM

கரை ஒதுங்கிய சிறுவனின் புகைப்படத்தால் மனமாற்றம்: அர்ஜென்டீனாவும் ஆதரவுக் கரம் - அகதிகளுக்கு ஐரோப்பா அடைக்கலம்

எந்த நாடும் இல்லாமல் பரிதவிக்கும் அகதிகளை ஏற்றுக் கொள்வதாக ஆஸ்திரியா, ஜெர்மனி, பின்லாந்து மற்றும் அர்ஜென்டீனா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.

சிரியா, இராக், ஆப்கானிஸ்தான், லிபியா உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருவதால் அந்த நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

அவர்கள் ஆபத்தான கடல் பயணம் மூலம் ஐரோப்பிய நாடு களில் தஞ்சம் கோரி வருகின்றனர். ஆனால் துருக்கி, கிரீஸ், இத்தாலி, ஹங்கேரி, மாசிடோனியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளின் அரசுகள் அபாயகரமான வேலி களை அமைத்து அகதிகளை தடுத்து வந்தன.

உலகை மாற்றிய புகைப்படம்

அண்மையில் சிரியாவில் இருந்து குடும்பத்துடன் கடல் மார்க் கமாக தப்பி வந்த அப்துல்லா குர்து என்பவரின் மனைவி, இரண்டு குழந்தைகள் படகு விபத்தில் உயிரிழந்தனர். இதில் அய்லான் என்ற 3 வயது சிறுவனின் உடல் துருக்கியின் கோஸ் தீவில் கரை ஒதுங்கிய புகைப்படம் உலக நாடு களின் மனச்சாட்சியை உலுக்கியது.

அந்த ஒரு புகைப்படத்தால் ஐரோப்பிய நாடுகளின் மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந் தனர். அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் என்று கோரி லண்டன் உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து எந்த நாடும் இல்லாமல் பரிதவிக்கும் அகதி களை ஏற்றுக் கொள்வதாக ஆஸ்திரியா, ஜெர்மனி, பின்லாந்து மற்றும் தென்அமெரிக்க நாடான அர்ஜென்டீனா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

ஹங்கேரியின் திடீர் மாற்றம்

ஹங்கேரியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிரியா நாட்டு அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ரயில் பயணம் மேற்கொள்ள அந்த நாட்டு அரசு தடை விதித்தது. இதனால் அவர்கள் அனைவரும் நடைபயணமாக ஆஸ்திரிய தலைநகர் வியன்னா நோக்கி நடந்து சென்று கொண்டி ருந்தனர்.

நேற்றுமுன்தினம் இரவு திடீரென கட்டுப்பாடுகளை நீக்கிய ஹங்கேரி அரசு அவர்களுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. 4 ஆயிரம் அகதிகளும் ஆஸ்திரியாவின் எல்லையான நிக்கல்டோர்ப் நகரில் கொண்டு விடப்பட்டனர்.

ஆஸ்திரியா, ஜெர்மனி வரவேற்பு

அங்கு ஆஸ்திரிய தொண்டு நிறுவனங்கள் சார்பில் அகதிகளுக்கு உணவுப் பண்டங்கள் வழங்கப்பட்டன. அகதிகள் விரும்பினால் தங்கள் நாட்டிலேயே குடியேறலாம் அல்லது ஜெர்மனிக்கு செல்லலாம் என்று ஆஸ்திரிய அரசு அறிவித்துள்ளது.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆரம்பம் முதலே அகதிகள் விவகாரத்தில் பரிவுடன் நடந்து வருகிறார். மிக அதிக எண்ணிக்கையிலான அகதிகளுக்கு அந்த நாட்டு அரசு அடைக்கலம் அளித்துள்ளது. இதனால் பெரும்பாலான அகதிகள் ஏஞ்சலா மெர்கலின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி பயணம் மேற்கொள்கின்றனர். இப்போதும் அகதிகளை மனிதநேயத்துடன் வரவேற்பதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. பெரும்பாலான அகதிகள் ஜெர்மனி நோக்கி பயணத்தை தொடர்கின்றனர்.

வீட்டை வழங்கிய அதிபர்

பின்லாந்து பிரதமர் ஜூஹா சிபிலா நேற்று நிருபர்களிடம் கூறியபோது, அகதிகளுக்கு பின்லாந்து மக்கள் அடைக்கலம் அளிக்க வேண்டும், தலைநகர் ஹெல்சின்கியில் உள்ள எனது வீட்டை அகதிகள் முகாமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டீனா ஆதரவுக் கரம்

தென்அமெரிக்க நாடான அர்ஜென்டீனா அரசு, அகதிகள் தங்கள் நாட்டுக்கு வரலாம் என்று அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அமைச்சரவை தலைவர் அனிபல் பெர்னாண்டஸ் கூறியபோது, ஆபத்தில் உதவுவது அர்ஜென்டீனாவின் இயல்பு, சிரியா அகதிகளுக்காக எங்கள் நாட்டின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே லக்சம்பர்க் நாட்டில் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் கூடி அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் அதிக அகதிகளை ஐரோப்பிய நாடுகள் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஹங்கேரி எல்லையோர கிராமத்தில் தவித்த அகதிகள் நேற்று பஸ்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுக்கு ஆஸ்திரியாவும் ஜெர்மனியும் அடைக்கலம் தர முன்வந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x