Published : 26 May 2020 07:18 PM
Last Updated : 26 May 2020 07:18 PM
ரஷ்யாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 174 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். கரோனாவால் ரஷ்யாவில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும்.
ரஷ்யாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) 174 பேர் பலியானதால் கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை அங்கு 3,087 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மட்டும் ரஷ்யாவில் 8,915 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,62,342 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் 12,331 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில் ரஷ்யாவில் கரோனா தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் நாட்டின் பல இடங்களில் ஊரடங்கைத் தளர்த்தும் நடவடிக்கையில் புதின் அரசு ஈடுபட்டுள்ளது.
ரஷ்யாவில் கடந்த ஒரு மாதமாகவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக ஒவ்வொரு நாளும் 10,000 பேர் வரை ரஷ்யாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கரோனாவால் பாதிப்புக்குள்ளான முதல் பத்து நாடுகளில் ரஷ்யா தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கரோனா வைரஸால் 17,06,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரேசிலில் 3,76,669 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ உட்பட பல முக்கிய அமைச்சர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷூஸ்டின் கடந்த மாதம் கரோனா தொற்றுக்கு ஆளானார். பின்னர் குணமடைந்து பணிக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT