Published : 02 Apr 2015 11:12 AM
Last Updated : 02 Apr 2015 11:12 AM
மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாயினர். மேலும் புதையுண்ட 20-க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
கச்சின் மாகாணம் பகந்த் நகரில் பச்சை மாணிக்கக் கல் சுரங்கம் உள்ளது. இதில் சுமார் 30 தொழிலாளர்கள் மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்தபோது, திடீரென மண் குவியல் அவர்கள் மீது சரிந்ததில் புதையுண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து காரணமாக நாட்டின் ஆபரணக் கற்கள் தொழில் துறைக்கு பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது. இப்பகுதியில் விபத்து, நிலச்சரிவு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இதே பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலியாயினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT