Published : 05 Feb 2015 03:36 PM
Last Updated : 05 Feb 2015 03:36 PM
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தொடர வேண்டியிருக்கும் தேவை குறித்தும் அதிலிருக்கும் சவால்கள் குறித்தும் இஸ்லாமிய தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்க வாழ் இஸ்லாமிய தலைவர்களை வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஒபாமா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இஸ்லாத்தின் பெயரில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்லாமிய தலைவர்கள் அணிதிரள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர், "ஐ.எஸ். தீவிரவாதிகள் அரங்கேற்றிவரும் வன்முறைகள் இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்படுவது வருத்தம் அளிக்கிறது.
தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை அவசியமானதாக ஆகிவிட்டது. இதில் பல சவால்களும் நிறைந்துள்ளது. அமெரிக்காவின் வளர்ச்சியில் இங்கு வாழும் இஸ்லாமியர்களுக்கு சம பங்கு உண்டு. ஜனநாயக நாட்டில் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக உள்ளது.
தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது இஸ்லாமிய தலைவர்களோடு நான் ஆலோசிக்க விரும்புகிறேன்.
இதன் மூலம் தீவிரவாதத்தை வளரவிடாமல் தடுக்க எதிர்காலத்தில் செய்ய தேவையான புரிதல் ஏற்படும்" என்று ஒபாமா கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT