Published : 28 Dec 2014 12:31 PM
Last Updated : 28 Dec 2014 12:31 PM

உலக மசாலா: பணக்காரப் பூனை

‘உலகிலேயே மிகவும் பணக்காரப் பூனை’ என்ற தலைப்பில் இணையதளத்தில் ஒரு போட்டி அறிவிக்கப்பட் டிருந்தது. உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பூனைப் புகைப்படங்கள் வந்து சேர்ந்தன. அதில் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்ட பூனையின் படங்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். டாலர் நோட்டுகள் மீது அமர்ந்து, 2 துப்பாக்கிகளை வைத்துக்கொண்டிருக்கிறது ஒரு பூனை. இன்னொரு பூனை டாலர் நோட்டுகள் மீது படுத்திருக்கிறது, அருகில் மது பாட்டில், கத்தி… எல்லாப் புகைப் படங்களிலும் டாலர் நோட்டுகள் கொட்டிக் கிடக்கின்றன.

உலகம் முழுவதும் பணக்கார பூனை என்றவுடன், பணத்தை வைத்துதான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற சிந்தனை எப்படித் தோன்றி யிருக்கிறது… அதேபோல பணம் நிறைய இருக்கும் இடங்களில் போதைப் பொருட்கள், மது, துப்பாக்கி போன்ற மோசமான விஷயங் கள் இருக்கும் என்று எல்லோரும் எப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள் என்ப தும் வியப்பாக இருக்கிறது என்கிறார்கள் போட்டியை நடத்தியவர்கள்.

பூனைக்கான போட்டியாக இருந்தாலும் மனிதனின் குணம் மாறாது போலிருக்கு!

நெதர்லாந்தில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் உலகப் புகழ்பெற்ற நான்கு மனிதர்களின் இறுதி நிமிடங்களை உணரச் செய்கிறார்கள். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கென்னடி, இங்கிலாந்து இளவரசி டயானா, லிபியாவின் முன்னாள் தலைவர் முகமது கடாபி, பாடகி ஹுஸ்டன் ஆகியோரின் இறுதி நிமிடங்களை ஒலி, வாசனை மூலம் உணரச் செய்கிறார்கள்.

சில்வர் மெட்டல் பெட்டியில் படுத்தால், முதலில் இருளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். பிறகு ஒவ்வொருவரைப் பற்றியும் நினைக்கச் சொல்கிறார்கள். பிரபலங்கள் பயன்படுத்திய வாசனை திரவியம், மருந்து போன்ற மணங்களை நுகர வைக்கிறார்கள். இறுதியில் ஒலியைப் பரப்புகிறார்கள். பிரபலங்களின் கடைசி நிமிடங்களில் அவர்களுடன் இருந்தது போன்ற உணர்வைத் தருகின்றன. சர்ச்சைக்குரிய இந்தச் செயல்பாட்டை ஐரோப்பா முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள்.

எங்கிருந்துதான் இப்படி எல்லாம் யோசனை வருதோ…!

ஸ்லோவேனியா பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப் பனிப் புயல் வீசி வருகிறது. பைன் மரங்கள் எல்லாம் பனியால் உறைந்து போயிருக்கின்றன. பார்ப்பதற்கு விநோதமான பனிச் சிற்பங் கள் போலக் காட்சியளிக்கின்றன. புகைப்படக்காரர் மார்கோ கொரொசெக் அங்கே சென்று, விதவிதமாக புகைப்படங்களை எடுத்து வந்திருக் கிறார். ஃப்ரோசன் என்ற டிஸ்னி படத்தைப் போலவே நிஜத்திலும் பனிப்பொழிவும் பனிச் சிற்பங்களும் வியப்பை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார் மார்கோ.

முன்னாடி நிஜத்தில் இருப்பது போல படத்தில் வரும்… இப்ப படத்தில் இருப்பது போல நிஜத்தில்…

உலகிலேயே மிகவும் அரிதாகிக்கொண்டு வரும் விலங்குகளில் ஒன்று உராங்குட்டான். ஹங்கேரியில் உள்ள புதபெஸ்ட் உயிரியல் பூங்காவில் புலு மடா என்ற உராங்குட்டான் பிறந்தது. பிரசவத்தில் ஏற்பட்ட பாதிப்பால் தாய் இறந்து போனது. 7 ஆண்டுகள் வரை உராங்குட்டான்களுக்கு தாயின் அரவணைப்பு தேவைப்படும். அதனால் வேறொரு தாயைத் தேடிக்கொண்டிருந்தனர்.

அதுவரை புதபெஸ்ட் பூங்காவில் இருப்பவர்கள் மனிதக் குழந்தையைப் போலவே புலுவையும் பார்த்துக்கொண்டனர். புட்டியில் பாலூட்டினர். மார்பில் போட்டு தாலாட்டினர். கையைப் பிடித்து நடக்கக் கற்றுக்கொடுத்தனர். 12 வாரங்களுக்குப் பிறகு ஒரு தாய் உராங்குட்டானை கண்டுபிடித்தனர். அந்தத் தாய்க்கு ஏற்கெனவே 2 மகன்கள், 3 வயதில் ஒரு பெண் உராங்குட்டானை தத்தெடுத்திருந்தது. இப்பொழுது புலுவும் அந்தத் தாயிடம் சென்று சேர்ந்துவிட்டது. இனி 7 ஆண்டுகள் வரை கவலை இல்லை என்கிறார்கள் பூங்காவைச் சேர்ந்தவர்கள்.

நல்ல காரியம் செய்திருக்கிறார்கள்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x