Published : 04 May 2024 03:38 PM
Last Updated : 04 May 2024 03:38 PM

‘கூலி’ பட விவகாரத்தில் இளையராஜா நோட்டீஸ்: ரஜினிகாந்த் கருத்து

சென்னை: “அது இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையிலான பிரச்சினை” என இசையமைப்பாளர் இளையராஜா காப்புரிமை நோட்டீஸ் அளித்த விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசரை அண்மையில் படக்குழு வெளியிட்டது. இதில் 1983-ல் ரஜினி நடித்த ‘தங்கமகன்’ படத்தில் இளையராஜா இசையமைத்த ‘வாவா பக்கம் வா’ பாடலின் ‘டிஸ்கோ’ இசை பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த இசை தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாக சன் பிக்சர்க்ஸ் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், ‘வா வா பக்கம் வா’ பாடலின் அனைத்து விதமான உரிமையும் இளையராஜாவிடமே உள்ளது. எனவே அந்தப் பாடலை பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டும், இல்லையெனில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்று இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், த.செ.ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் இளையராஜா நோட்டீஸ் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அது இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையிலான பிரச்சினை” என்றார். மேலும், “கூலி டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x