Published : 10 Aug 2017 10:25 AM
Last Updated : 10 Aug 2017 10:25 AM

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அப்பகுதியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா, பஞ்சாப், சிந்து என 4 மாகாணங்கள் உள்ளன. இந்நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிக்கு தனி மாகாண அந்தஸ்து வழங்க பாகிஸ்தான் அண்மையில் முடிவு செய்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த சமுதாய தலைவர்களும் பாகிஸ்தானின் முடிவை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் பாகிஸ்தானின் அராஜகத்துக்கு எதிராக சமூக ஆர்வலர் ஹஸ்னெய்ன் ரமால் குரல் எழுப்பினார்.

அவர் தனது சமூக வலைதளத்தில், காஷ்மீரின் மூன்றில் ஒரு பங்கை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. இந்தப் பகுதி மக்களுக்கு பாகிஸ்தான் அரசு எவ்வித நன்மையையும் செய்யவில்லை. இங்குள்ள இயற்கை வளங்களை சுரண்டி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து அண்மையில் அவர் தீவிரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அவரை விடுதலை செய்யக் கோரி கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கில்ஜித்-பல்டிஸ்தான் அமைப்பின் தலைவர் கான் கூறியபோது, “ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித்-பல்டிஸ்தானில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. அமைதி வழியில் போராடினால்கூட தீவிரவாதிகளாக சித்தரித்து சிறையில் அடைத்து கொடுமைபடுத்துகின்றனர்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x