Last Updated : 10 Aug, 2017 03:42 PM

 

Published : 10 Aug 2017 03:42 PM
Last Updated : 10 Aug 2017 03:42 PM

அமெரிக்காவுக்கான எச்சரிக்கையா?- வடகொரியாவில் பிரமாண்ட பேரணி

வடகொரியாவின் மீது ஐநாவில் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையை எதிர்த்து அந்நாட்டில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

சர்வதேச சட்டதிட்டங்கள், ஐ.நா.வின் விதிகள் எல்லாவற்றையும் மீறி அணுஆயுத சோதனை நடவடிக்கைகளில் வடகொரியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அதிநவீன ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் ஏவுகணை சோதனையை சமீபத்தில் வடகொரியா வெற்றிகரமாக நடத்தியது.

இதையடுத்து வடகொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடையை விதிக்க ஐ.நா.வில் அமெரிக்கா ஒரு புது தீர்மானம் கொண்டு வந்தது. அந்தத் தீர்மானத்துக்கு கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளும் ஒப்புதல் வழங்கின.

இந்த நிலையில் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வடகொரியாவில் பிரமாண்டமான பேரணி புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணியின்போது அமெரிக்காவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் வடகொரியாவின் பலத்தை உணர்த்து பதாகைகளை பேரணியில் பங்கேற்றவர்கள் தாக்கிச்சென்றனர்.

வலுக்கும் சண்டை

வடகொரியா மீதான ஐ நாவின் பொருளாதார தடைக்கு பிறகு அமெரிக்கா - வடகொரியாவுக்கு மோதல் மேலும் அதிகரித்துள்ளது

அமெரிக்காவின் ராணுவ தளவாட பகுதியான குவாம் தீவுப் பகுதியை தாக்க வடகொரியா தயாராகிக் கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குவாம் பகுதியில் வடகொரியா தாக்குதல் நடத்தினால் இதுவரை அந்நாடு எதிர்கொள்ளாத விளைவை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x