Published : 23 Jun 2016 10:26 AM
Last Updated : 23 Jun 2016 10:26 AM

உலக மசாலா: 40 ஆண்டுகளாகக் கெட்டுப் போகாத கேக்!

1976ம் ஆண்டு அமெரிக்காவின் ஜார்ஜ் ஸ்டீவன்ஸ் அகாடமியில் வேதியியல் ஆசிரியராக இருந்தவர் ரோஜெர் பென்னாட்டி. ஒருநாள் ட்வின்கியை (கேக்) வகுப்பறையில் வைத்து, இது மட்குவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று கேட்டார். மாணவர்கள் ஒருவருக்கும் தெரியவில்லை. ரோஜெருக்கே கூட இந்தக் கேள்விக்குப் பதில் இல்லை. காகிதம் சுற்றப்படாத ட்வின்கியை ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து மூடினார். எத்தனை நாட்களில் மட்கும் என்பதை நேரடியாகப் பார்த்துவிடலாம் என்பது அவரது திட்டம். ஆனால் 40 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை!

உலகிலேயே மிகப் பழமையான ட்வின்கி என்ற பெயருடன், 40 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வைக்கப்பட்டதோ, அப்படியே இருக்கிறது! இன்று கூட ட்வின்கியை 25 நாட்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது என்கிறது தயாரிப்பு நிறுவனம். “நாங்கள் உணவு குறித்து ஆராய்ந்துகொண்டிருந்தோம். இந்த ட்வின்கியை பரிசோதனைக் கூடத்தில் வைத்துவிட்டோம். 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரோஜெர் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டார். அதற்குப் பிறகு இந்தப் பரிசோதனை என்னிடம் வந்து சேர்ந்தது. இதுவரை யாரும் இதை எடுத்துப் பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்யவில்லை. இன்னும் எவ்வளவு காலம் இது தாக்குப் பிடிக்கிறது என்று பார்ப்போம். எனக்குப் பிறகு வருகிறவர்கள் இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து, பாதுகாத்தால் எங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிடும்!’’ என்கிறார் இங்கே பணிபுரியும் லிபி ரோஸ்மியர்.

40 ஆண்டுகளாகக் கெட்டுப் போகாத கேக்!

குறைந்தபட்ச தேவைகளுடன் வாழ்க்கை நடத்தும் கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளில் பரவி வருகிறது. ஜப்பானியர்களும் இந்த வாழ்க்கை முறையை அதிகமாக விரும்புகிறார்கள். மக்கள் தொகை அதிகமிருக்கும் ஜப்பானிய நகரங்களில் இடப் பற்றாக்குறை அதிகம். இந்தச் சூழ்நிலையில் தேவையற்ற பொருட்களை வாங்குவதை ஜப்பானியர்கள் தவிர்த்து வருகிறார்கள்­. “ஜென் தத்துவங்களைப் பின்பற்றும் எங்களுக்கு இந்த வாழ்க்கை முறை கஷ்டமாக இல்லை. ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். பொருட்கள் விழுந்து உடைந்து போகும். ஆனால் குறைந்தபட்ச வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டால் இந்தப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பே இல்லை. 4 பேண்ட்கள், 3 சட்டைகள், 4 சாக்ஸ்கள் மற்றும் மிக முக்கியமான சில பொருட்கள் மட்டுமே என் வீட்டில் இருக்கின்றன.

நாம் வாங்கி பிறகு பயன்படுத்துவோம் என்று பரணில் போடும் எந்தப் பொருளையும் நாம் பயன்படுத்துவதே இல்லை. அதனால் தேவையின்றி வீட்டில் பொருட்களைச் சேகரிக்க வேண்டாம். பொருட்கள் மிகக் குறைவாக இருப்பதால் வீட்டில் இடம் அதிகம் கிடைக்கிறது. சுத்தம் செய்யும் வேலை குறைந்துவிட்டது. ஷாப்பிங் செய்வது குறைந்துவிட்டதால் பணமும் மிச்சமாகிறது’’ என்கிறார் ஃபுமியோ சசாகி.

நாம் அவசியம் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x