Last Updated : 27 Apr, 2018 05:23 PM

 

Published : 27 Apr 2018 05:23 PM
Last Updated : 27 Apr 2018 05:23 PM

மியான்மர் பவுத்த அடக்குமுறைக்குப் பிறகு 7 லட்சம் ரோஹிங்கியர்களை அச்சுறுத்தும் ‘2வது பேரழிவு’: எங்கு செல்வார்கள்?

அந்த 14 பயங்கர நாட்களை மியான்மர் ரோஹிங்கிய முஸ்லிம் நபில் ஆலம் தற்போது நினைக்கும் போது கூட நடுங்குகிறார். வடக்கு மியான்மரின் அடர்ந்த காடுகள் ஊடே மனைவி, 9 குழந்தைகளுடன் ஒரு புறம் மியன்மரின் கொடூர ராணுவம் மற்றொரு புறம் உள்ளூர் போராளிக்குழு... இருவரிடையேயும் சிக்கினால் நரகம்தான். வங்கதேசத்தை அடைவதற்கு முன்னால் நபில் ஆலம் 9 குழந்தைகள் மனைவியுடன் அனுபவித்த பயங்கரம், ரோஹிங்கியர்களின் தற்போதைய நிலையின் குறியீடாகும்.

மேலே கூறியது நடந்தது 8 மாதங்களுக்கு முன்பாக. தற்போது தென்கிழக்கு வங்கதேசத்தில் அகதிகள் முகாம்களில் ரோஹிங்கியர்கள் இயற்கையின் சீற்றத்தை அஞ்சி வான் வெளியைப் பார்த்து வருகின்றனர், ஒவ்வொரு முறை கருமேகங்கள் சூழ்ந்து இடிமின்னல் தாக்கும் போதும் பீதியில் முடங்குகின்றனர்.

மாதக்கணக்கில் பெய்யும் பருவ மழை, புயல் நிச்சயம் 7 லட்சம் வங்கதேச அகதிகளாக இருக்கும் ரோஹிங்கியர்கள் வாழ்க்கையை மேலும் நரகத்தில் தள்ளப்போவது பற்றிய அச்சம் அவர்கள் முகத்தில் தெரிகிறது.

உலகிலேயே வெள்ளத்திற்கு பெயர் பெற்ற நாடு என்றால் அது வங்கதேசம்தான் அதுவும் கோக்ஸ் பஜார் மிகவும் பிரசித்தம். இது கடல் மட்டத்தை விட 3 அடி மேலேயுள்ளது. சில வேளைகளில் சிட்டகாங் போன்ற நகரங்களையே ராட்சத அலைகள் நீரால் மூழ்கடித்து விடும் நிலையில் ரோஹிங்கிய அகதிகள் வாழும் பகுதி இன்னும் மோசம்தான்.

வங்கதேசத்தின் புவியியல் அதனை பெரிய பெரிய புயல்களுக்கு இலக்காக்குவதாகும். 1970-ம் ஆண்டு புயலில் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்தது அப்போதைய உலக அதிர்ச்சியாகும். 1991-ம் ஆண்டு ஏற்பட்ட புயல் சுமார் 10 லட்சம் பேரை உள்நாட்டு அகதிகளாக்கியது. சிதிர் என்ற புயல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக சுமார் 10,000 உயிர்களைப் பலிவாங்கியது.

இந்த முறையும் புயல், மழை தாக்கினால் அது மூங்கில், தார்பாய் டெண்ட்களில் வசிக்கும் 7,00,000 ரோஹிங்கிய முஸ்லிம்களை பெரிய அளவில் அச்சுறுத்தும் என்று கூறப்படுகிறது. உதவிக்குழுக்கள் ஏற்கெனவே கூறும்போது, “ரோஹிங்கியர்களை அச்சுறுத்தும் 2வது பேரழிவு” என்று வர்ணிக்கின்றனர்.

‘உயிர்கள் பெரிய அளவில் பலியாகும்’ என்று கூறுகின்றனர் உதவிக்குழுக்கள். எவ்வளவு என்பதுதான் தெரியவில்லை என்பதே மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

சுமார் 2 லட்சம் ரோஹிங்கிய அகதிகள் வங்கதேசத்தில் நிலச்சரிவு, கடும் வெள்ளம் ஆகியவற்றுக்கு நேரடியான அபாயப்பகுதியில் உள்ளனர், உடனடியாக இவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும். ஆனால் எங்கு செல்வார்கள்? இப்போதைகு வங்கதேசம் கையைப் பிசைந்து கொண்டுதான் இருக்கிறது.

அழிவின் முதல் அறிகுறி தோன்றியது:

கடந்த வாரத்தில் கனமழை பெய்தது பதிவாகியுள்ளது. வரவிருப்பதற்கு அறிகுறியாக, சோதனை ஓட்டமாக இந்த மழை இருந்ததாக உதவிக்குழுக்கள் ஏற்கெனவே தங்கள் கவலைகளை வெளியிட்டனர். அகதிகள் முகாம் பகுதிகளில் உள்ள தற்காலிக நீர்வழிப்பாதைகள் அடைக்கப்பட்டன. ஏற்கெனவே சிலர் முகாம்களை இழந்துள்ளனர், பலர் உணவின்மையை எதிர்கொண்டு வருகிறனர்.

கோக்ஸ் பஜார் பகுதிக்கு திடீரென கும்பல் கும்பலாக அகதிகள் மியான்மரிலிருந்து வருவது அப்பகுதியின் நிலவியலையே மாற்றியுள்ளது. வங்கதேச அரசு கைவிட்ட வளர்ச்சியில்லாத 1,900 ஹெக்டேர்கள் வனப்பகுதி ரோஹிங்கிய அகதிகள் பகுதியாகியுள்ளன. முன்பு களிமண்ணை ஒன்று சேர்த்து வைத்து நிலச்சரிவுகளைத் தடுக்கும் அப்பகுதியின் வேரடி அமைப்பு ரோஹிங்கிய அகதிகள் முகாம்களினால் பாதிப்படைந்துள்ளது.

வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றின் கசப்பான அனுபவங்களிலிருந்து வங்கதேசம் பாடம் கற்றுக் கொண்டுள்ளது. இதனையடுத்து மக்களுக்கு அவ்வப்போது உதவிகளை அதிகரித்து அதை திறம்பட நிர்வகிக்க முயற்சி செய்து வருகிறது.

வெள்ளத்தின் போது உயரமான இடங்களுக்குச் செல்வதும் பாதுகாப்பான முகாம்களில் இருப்பதுமாகிய 2 தெரிவுகளுமே ரோஹிங்கியர்களுக்கு இப்போது இல்லை என்றே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனிதார்த்த உதவி அமைப்புகள் சுமார் 15,000 ரோஹிங்கிய குடும்பங்களை ஆபத்தான பகுதிகளிலிருந்து வெளியேற்றியுள்ளனர், ஆனால் போதிய பாதுகாப்பு இடங்களும் இல்லை.

“எதிர்பார்க்கப்படும் பேரழிவு நடந்தே தீரும் என்றே தெரிகிறது” என்றே உதவிக்குழுக்கள் கூறுகின்றன.

ஆகவே மியான்மர் அடக்குமுறையிலிருந்து தப்பி வந்த 7 லட்சம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் இயற்கையின் சீற்றத்தை எதிர்கொண்டு அவர்களுக்குப் பழகிய தீர்வான ‘நின்று எதிர்கொள்’ அல்லது ஓட்டம் என்ற தெரிவுகளையேக் கொண்டுள்ளது. என்ன செய்யும் வங்கதேசம்? என்ன செய்யப்போகிறார்கள் ரோஹிங்கியர்கள்? குழந்தைகள், பெண்கள், முதியவர்கள்? என்ற கேள்வி உலக மனிதார்த்த மதிப்பீடுகளுக்கு விடுக்கப்படும் சவாலாக இன்று பெரிய உருவம் பூண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x