Published : 10 Feb 2018 07:53 AM
Last Updated : 10 Feb 2018 07:53 AM

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மசோதா நிறைவேற்றம்

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2 ஆண்டு பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் சுமார் 5 மணி நேரம் நீடித்த அரசு நிர்வாக முடக்கம் நீங்கியது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் 435 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் அவை, 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் அவை உள்ளன. கடந்த ஜனவரி 20-ம் தேதி செனட் அவையில் தாக்கல் செய்யப்பட்ட ‘செலவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் மசோதா’ (பட்ஜெட்) தோல்வி அடைந்ததால் அரசு நிர்வாகம் 3 நாட்கள் முடங்கியது. பின்னர் ஆளும் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி தலைவர்களிடையே உடன்பாடு எட்டப்பட்டு, பிப்ரவரி 8-ம் தேதி வரையிலான செலவினங்களுக்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் அரசு நிர்வாக முடக்கத்தை தவிர்க்க 2 ஆண்டு பட்ஜெட் மசோதாவை நிறைவேற்ற ஆளும் கட்சி முடிவு செய்தது. இதற்கு ஜனநாயக கட்சி நிபந்தனைகளின்பேரில் ஆதரவளிக்க முன்வந்தது.

இந்த மசோதா கடந்த 8-ம் தேதி செனட் அவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்பாராத திருப்பமாக ஆளும் குடியரசு கட்சி உறுப்பினர் ரேண்ட் பால், தான் கொண்டு வந்த திருத்தங்கள் குறித்து விவாதிக்க கோரிக்கை விடுத்தார். இதனால் சிக்கல் நீடித்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு 71 உறுப்பினர்கள் ஆதரவுடன் செனட் அவையில் மசோதா நிறைவேறியது.

ஆனால், பிரதிநிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டும், காலக்கெடு நிறைவடைந்ததால் 9-ம் தேதி அதிகாலை முதல் அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது. அத்துடன் பிரதிநிதிகள் சபையில் பட்ஜெட் தொடர்பாக நீண்ட விவாதம் நடைபெற்றது. இறுதியில் 240 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. 186 பேர் எதிராக வாக்களித்தனர். இதன்மூலம் 5 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த அரசு நிர்வாக முடக்கம் நீங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x