Published : 03 Dec 2017 09:09 AM
Last Updated : 03 Dec 2017 09:09 AM
சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்ததற்கு பிரதமர் மோடி யைத் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டை இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து ஐதராபாத்தில் நடத்தின. கடந்த 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். மாநாட்டை முடித்துக் கொண்டு இவாங்கா அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அதிகாலை பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தொழில் முனைவோர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு ட்ரம்ப் மகிழ்ச்சியும் திருப்தியும் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 13-ம் தேதி மணிலாவில் ஆசியான் மாநாடு நடந்தது. அப்போது மோடியும் ட்ரம்ப்பும் சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு இரு தலைவர்களும் நேற்று தொலைபேசியில் பல்வேறு விஷயங்களை பேசி யுள்ளனர்.
இத்தகவலை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலகம் நேற்று வெளியிட்டது.
முன்னதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா டெல்லி வந்திருந்தார். அவரை ஹைதராபாத் இல்லத்தில் வரவேற்று பிரதமர் மோடி உரையாடினார். இந்த சந்திப்பு நடந்த சில மணி நேரத்துக்குப் பிறகு அதிபர் ட்ரம்ப் மோடியிடம் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT