Published : 02 Dec 2017 09:53 AM
Last Updated : 02 Dec 2017 09:53 AM
பாகிஸ்தான் அரசு மிகவும் பலவீனமாக உள்ளது, அந்த நாட்டில் ராணுவம் எந்நேரமும் ஆட்சியைக் கைப்பற்றும் அபாயம் உள்ளது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் தேர்தல் சீர்திருத்தச் சட்டத்தில் அண்மையில் திருத்தம் செய்யப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்க வேண்டிய உறுதிமொழியில் “முகமது நபியே இறைவனின் கடைசி தூதர்” என்ற வாசகம் விடுபட்டிருந்தது.
இது மத நிந்தனை என்று குற்றம் சாட்டி இஸ்லாமிய அமைப்பான தெஹ்ரிக்-இ-லபைக் யா ரசூல் அல்லா கட்சி நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டது. அந்த கட்சியின் தொண்டர்கள் லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு பேரணியாக சென்றனர். தலைநகரில் சாலைகளை முற்றுகையிட்டனர். இதன்காரணமாக இஸ்லாமாபாத்தில் 20 நாட்கள் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆனால் கடைசிவரை ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதைத் தொடர்ந்து ராணுவம் தலையிட்டு இருதரப்பிலும் சமரசம் செய்து வைத்தது.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் மாளிகை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இஸ்லாமாபாத் ஆர்ப்பாட்டத்தில் ராணுவத்தின் தலையீடு கவலையளிக்கிறது. இதன்மூலம் தீவிரவாதிகள், அடிப்படைவாதிகளுக்கு தைரியம் அதிகரிக்கும்.
ராணுவம் எந்த நேரமும் ஆட்சியைக் கைப்பற்றும் அபாயம் உள்ளது. ஒருவேளை பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ ஆட்சி ஏற்பட்டால் அமெரிக்க-பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்படும். பாகிஸ்தானில் பேச்சுரிமை, மதச் சுதந்திரம், மனித உரிமைகள் மதிக்கப்படவில்லை. அந்த நாட்டு அரசு மிகவும் பலவீனமாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT