Published : 08 Nov 2017 01:38 PM
Last Updated : 08 Nov 2017 01:38 PM
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 11 நாட்கள் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். ஜப்பான், தென் கொரியா, சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ட்ரம்புடன் அவரது மனைவி மெலானியா ட்ரம்பும் உடன் சென்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் சென்ற அதிபர் ட்ரம்ப் அங்கு ஜப்பான் - அமெரிக்க இரு நாடு உறவு குறித்து ஆலோசித்ததுடன், தொடர்ந்து அத்துமீறி அணுஆயுத ஏவுகணை சோதனைகள் நடத்திவரும் வடகொரியாவுடன் இனியும் பொறுமையைக் கடைபிடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற ட்ரம்ப் தலைநகர் சியோலில் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுடன் இணைந்து, போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் தென்கொரிய - அமெரிக்க ராணுவப் படைகளை ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து புதன்கிழமை சியோலில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் ட்ரம்ப் உரையாற்றினார் அதில் ட்ரம்ப் பேசும்போது, "நான் இன்று பேசுவது எனது நாட்டுக்காக மட்டுமல்ல அனைத்து நாகரிக நாடுகளுக்கும் பொருந்தும். வடகொரியா எங்களை குறைவாக மதிப்பிட வேண்டாம். எங்களை முயற்சிக்க வேண்டாம்.
நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம். நீங்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் உங்களை பாதுகாக்கப் போவதில்லை. மாறாக, அவை உங்களை ஆபத்தான குழியில் தள்ளப் போகின்றன. இந்த இருண்ட பாதையில் நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களது ஆபத்தை அதிகரிக்கப் போகிறது” என்று எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT