Published : 20 Nov 2023 04:30 AM
Last Updated : 20 Nov 2023 04:30 AM

குழந்தைகளிடம் நல்லவற்றை பேசுவோம்

குழந்தைகள் தவழ்ந்து வளர்ந்து நடக்கத் தொடங்கும் பருவத்தில் ஏதேனும் ஒரு சின்ன செயல் செய்யும்போது குழந்தையைக் கொண்டாடி மகிழ்கிறோம். குழந்தைகள் செய்யும் நல்லவற்றுக்கெல்லாம் அப்பாவும் அம்மாவும் மாறிமாறி பொறுப்பேற்றுக் கொள்கிறோம். ஆனால் குழந்தைகள் ஒரு தவறு செய்தால் அதற்கு பொறுப்பேற்க தயங்குகின்றனர். என் குழந்தையா அப்படிச் செய்தது? இருக்காதே. அப்படியெல்லாம் ஒரு நாளும் செய்திருக்க வாய்ப்பு இல்லையே என்றெல்லாம் வாதிடுகிறோம். யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம். குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து நல்லவற்றையும் தீயவற்றையும் சேர்த்தே கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளின் நடத்தைகளில் பிரதிபலிப்பது அவர்களின் பண்பல்ல. அது பெற்றோரின் பண்பு, சமூகத்தின் நடத்தை. இந்த பண்புகள் அனைத்தும் குழந்தைகளின் உள்ளத்தில் பதிந்து நடத்தைகளிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்குகின்றன.

பெற்றோர் எப்படி பேசுகிறார்கள்: நானும் செம்மொழியும் பூங்காவில்அமர்ந்து வண்ணத்துப்பூச்சிகளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். “அப்பா வண்ணத்துப் பூச்சிக்குப் பசிச்சா தேன் குடிக்குமாம்.” “அப்படியா பாப்பா?” உங்களுக்கு அப்படி யார் சொன்னாங்க பாப்பா? “அம்மாதான் சொன்னாங்க அப்பா” என்கிறாள். அப்போது அங்கே ஒரு பெண் தன் குழந்தைகளோடு நடைப்பயிற்சி சென்றார். அவரோடு ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் சென்றனர். அந்தக் குழந்தைகளிடம் “கார்காரன் தான் வண்டிய திருப்புறான்ல நீயும் அவன் திருப்புற பக்கமே போய் நிக்கற பார்த்து போகமாட்டியா?” என்று கேட்கிறார்.

கார் ஓட்டுநரைத்தான் அந்தப் பெண் அவன், இவன் என்றுசொல்கிறார். பிறரை அவர், இவர்என்று குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக அவன், இவன் என்றே சொல்லித் தருகிறோம். வீடுகளில்கூட குழந்தைகள் நம்அருகில் இருக்கையில் நம் உரையாடலில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் முன்னால் பெற்றோர் சண்டை போடக்கூடாது. உரையாடல்களைக் கேட்டு வளரும் குழந்தைகளின் சிந்தனையில் எதிரே இருப்பவரைப் பற்றிய மதிப்பீடு என்பது எவ்வாறு இருக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்?

பொது வெளிப்பேச்சு: பொது வெளிகளில் இருந்தும் குழந்தைகள் நிறைய கேட்கிறார்கள். அங்கிருந்தும் நல்லவைகளும் கெட்டவைகளுமே வந்து சேர்கின்றன. இதில் நல்லது எது? கெட்டது எது? என்பதைக் குழந்தைகளால் பகுத்துப்பார்க்க இயலாத சூழலில் அவர்கள் பேசும் போதுதான் அவர்கள்பேசுவது சரியா? தவறா? என்பதைக் கூட நம்மால் யூகிக்க முடியும். அப்படித்தான் ஒரு பேருந்து பயணத்தில் நிகழ்ந்தது. நாங்கள் குடும்பத்தோடு பயணித்துக்கொண்டிருக்கையில் திடீரென பேருந்துக்குள் சண்டை நடைபெறத் தொடங்கியது. கெட்ட கெட்ட வசைச் சொற்கள் வாரி வீசுகிறார்கள்.

அந்தச் சொற்கள் குழந்தைகள் இதுநாள் வரையில் கேட்டிராதவை. ஆனாலும் இப்போது கேட்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது. குழந்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலை நம்மால் தவிர்க்கவும் முடியாது. மூன்று வயதே நிரம்பிய குழந்தைக்கு அந்தச் சூழலையும் தவறான சொற்கள் அவை என்பதையும் விளக்கிச் சொல்லிப் புரிய வைக்கவும் முடியாது. குழந்தை பேசுகிற போதுதான் இந்த வசவுச் சொற்களை எந்த அளவிற்கு உள் வாங்கி இருக்கிறது என்பதை உணர முடியும். அதுவரையில் காத்திருக்க வேண்டியதுதான்.

அப்படி அவர்கள் பேசும்போது கெட்ட சொற்களைப் பேசக் கூடாது என்றும் அப்படிப் பேசினால் நம் மீதானபிறரின் மதிப்பும் அன்பும் குறைந்துபோகும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். கருத்துகள் அமைந்த பாடல்கள், கதைகள் வழி் நல்ல சொற்கள், நல்லசிந்தனைகளை கொண்டு செல்வோம்.தீய சொற்கள் நமக்குத் துன்பத்தைஉண்டாக்கும் என்பதை நீதிக்கதைகளின் வழி வலியுறுத்தி வழிகாட்டுவோம். அன்பொன்றே அனைத்தையும் வெல்லும். கட்டுரையாளர் குழந்தைகளுக்கான தமிழ்பயிற்றுநர்,

- செம்மொழி தமிழ்க்கூடம், சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x