Published : 04 Nov 2022 06:05 AM
Last Updated : 04 Nov 2022 06:05 AM

2-ம் கட்ட கலந்தாய்வு தாமதமாகும் என தகவல்: மருத்துவ கல்லூரிகளில் சேர அவகாசம் இன்று நிறைவு

சென்னை: அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ இடங்களை மாணவ-மாணவிகள் தேர்வு செய்தனர். அவ்வாறு தேர்வு செய்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (நவ.4) முடிவடைகிறது.

ஒரு மாணவர் 2 இடஒதுக்கீட்டிலும் இடங்களை பெற்று இருப்பதால் 500-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு 2 ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த மாணவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும். அதையடுத்து 58 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள் என்ற விவரங்கள் மற்றும் காலி இடங்கள் குறித்த விவரங்களை மருத்துவ கல்வி இயக்ககம்சேகரிக்கும். அதன்படி, அரசு ஒதுக்கீட்டிலும், நிர்வாக ஒதுக்கீட்டிலும் மொத்தம் எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்ற தகவல்கள் அடிப்படையில் 2-ம் கட்ட கலந்தாய்விற்கான பட்டியல் தயாரிக்கப்படும்.

இதுகுறித்து மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்துசெல்வன் கூறுகையில், "மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நவ. 7-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தற்போது இந்த கலந்தாய்வு தள்ளிப் போகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன் தமிழகத்தில் 2-வதுசுற்று கலந்தாய்வு தொடங்கும். அப்போது அனைத்து காலி இடங்களும் நிரப்பப்படும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x