

கோவை: கோவை வெள்ளலூர் குளக்கரையில் பட்டாம்பூச்சிகளை ஆவணப்படுத்தும் பணியை இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு (டிஎன்பிஎஸ்), கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இணைந்து கடந்த ஓராண்டாக மேற்கொண்டு வந்தன. 2021 அக்டோபர் முதல் 2022 செப்டம்பர் வரை நடைபெற்ற கணக்கெடுப்பில், மொத்தம் 101 வகை பட்டாம்பூச்சிகள் கண்டறியப்பட்டன. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 328 வகை பட்டாம்பூச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அதில், 31 சதவீத வகைகள் வெள்ளலூர் குளக்கரையில் தென்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பு குறித்து டிஎன்பிஎஸ் ஒருங்கிணைப்பாளர் அ.பாவேந்தன் கூறியதாவது: தேனீக்கள் போன்றே பட்டாம்பூச்சிகள் மகரந்த சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பட்டாம்பூச்சிகள் வெளியில் உலவும்நேரமான சூரிய உதயத்துக்கு பிறகான நேரம் முதல் நண்பகல்வரை இந்த கணக்கெடுப்பு நடைபெற்றது. சதர்ன் பேர்டு விங், ஃபுளூ மார்மன், சாக்லேட் ஆல்பட்ராஸ், பேம்பூ ட்ரீபிரவுன், மெடஸ் பிரவுன்ஆகிய பட்டாம்பூச்சிகள் பெரும்பாலும் வனப்பகுதியில் மட்டுமே தென்படுபவை. அவற்றை வெள்ளலூர் குளக்கரையில் காண முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.