Published : 30 Sep 2022 07:20 AM
Last Updated : 30 Sep 2022 07:20 AM

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.முரளிதரை நியமிக்க ஒப்புதல்?

நீதிபதி எஸ்.முரளிதர்

சென்னை: ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் தமிழகத்தை சேர்ந்த எஸ்.முரளிதரை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த செப்.12-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமிக்கப்பட்டார். அவர் ஓய்வு பெற்றதை அடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பொறுப்பேற்றார்.

இந்நிலையில், ஒடிசா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் தமிழகத்தை சேர்ந்த எஸ்.முரளிதரை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. தலைமை நீதிபதி எஸ்.முரளிதர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னையில் சட்டப் படிப்பை முடித்துவிட்டு, டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தவர். கடந்த 2006-ல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2020-ல் பஞ்சாப் -ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். 2021 ஜன.4-ம்தேதி ஒடிசா உயர் நீதிமன்றதலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x