Published : 04 Oct 2020 07:17 AM
Last Updated : 04 Oct 2020 07:17 AM

பொறியியல் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் 6 ஆயிரம் இடங்கள் காலியாக வாய்ப்பு

பொறியியல் சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 6 ஆயிரம் இடங்கள் வரை காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1 லட்சத்து 63,154 இடங்கள் உள்ளன.இதற்கான சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க 1.12 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இணையவழியில் அக்.1-ம் தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 7,435 இடங்களுக்கு 2,413 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

அதேநேரம் 1,400 மாணவர்கள் வரையே முன்பதிவுக் கட்டணத்தைசெலுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகள், பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதற்கான செயல்முறைகள் நேற்று தொடங்கின. முதல்நாளில் 1,028 பேர் பதிவு செய்துள்ளனர். மற்றவர்கள் இன்று வரை (அக்.4) இணையதளத்தில் பூர்த்தி செய்ய அவகாசம் உள்ளது.

இதையடுத்து மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு பட்டியல் நாளை (அக்.5) வெளியிடப்படும். அதன்பின் மாணவர்கள் ஒப்புதல் அளித்ததும், இறுதிப்பட்டியல் அக். 6-ம் தேதி வெளியாகும். இதற்கிடையே சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் மொத்தம் உள்ள 7,435 இடங்களுக்கு 1,400 மாணவர்கள் வரையே பங்கேற்றுள்ளதால் 6 ஆயிரம் இடங்கள் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கலந்தாய்வில் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் காணொலிவடிவில் இணையதளத்தில் (www.tneaonline.org) வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விளக்கங்களைப் பார்த்துகலந்தாய்வில் பங்கேற்பது மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுப்பிரிவு கலந்தாய்வு அக். 8-ம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x