

பெருந்தொற்றுக்கு எதிராக அறிவு, தொழில்நுட்பத்துடன் போராடும் இளைய தலைமுறை எனப் பொருள்கொள்ளும் ‘யுக்தி 2.0’ தளத்தை உயர்கல்வி மாணவர்களுக்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இணையம் மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர், உயர் கல்வித்துறை கூடுதல் செயலர், ஏஐசிடிஇ தலைவர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் இணைய வழியில் இணைந்திருந்தனர்.
கரோனா வைரஸுக்கு எதிரான கண்டுபிடிப்புகளோடு இளைய தலைமுறையினர் செயலாற்றும் வகையில் ‘யுக்தி’ என்னும் இணைய தளத்தைக் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி அமைச்சர் பொக்ரியால் தொடங்கி வைத்தார். இளம் இந்தியர்களின் அறிவு, தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு ஆகிவற்றைக் கொண்டு கோவிட்-19 காய்ச்சலை எதிர்த்து நிற்பதே யுக்தியின் நோக்கமாகும்.
உயர் கல்வி நிறுவனங்களில் திறமை வாய்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் வணிகத் தன்மை கொண்ட தகவல்களை முறையாக ஒருங்கிணைக்க யுக்தி தளம் உதவுகிறது.
இதுகுறித்து அமைச்சர் பொக்ரியால் கூறும்போது, ''நம்முடைய இளைஞர்கள் தங்களது யோசனைகளைச் செயலாக்க முன்வர வேண்டும். உயர் கல்வித்துறையின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் யுக்தி தளத்தில் பதிவு செய்து தங்களின் தொழில்நுட்பங்களையும் கண்டுபிடிப்புகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். உங்களுக்காக உதவ மத்திய அரசு காத்திருக்கிறது'' என்று தெரிவித்தார்.