Published : 24 Jun 2020 07:25 AM
Last Updated : 24 Jun 2020 07:25 AM

நடப்புக் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய காலாண்டு தேர்வு ரத்து செய்வது குறித்து நிபுணர் குழு பரிந்துரையின்படி முடிவு: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

நடப்பு கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வை ரத்து செய்வது குறித்து நிபுணர்குழு பரிந்துரையின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன், முதல்வர் பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். அப்போது கிரேடு அடிப்படையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல், புதிய கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வை ரத்து செய்தல் உட்பட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பள்ளிகள் திறப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது புதிய கல்வியாண்டில் பள்ளிக்கல்வியில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அதன்பின், அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா சூழலால் பள்ளிக்கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய 18 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு தாமதம், குறுகிய காலத்தில் பாடத்திட்டங்களை கற்றுத்தரும் வழிமுறைகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையிலான பரிந்துரை அறிக்கையை ஜூலை முதல் வாரத்தில் அளிக்கும். அதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் தொடர்பாக முதல்வரிடம் ஒப்புதல் பெற்றபின் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்து கூறியதாவது: வரும் கல்வியாண்டில் காலாண்டு தேர்வை ரத்து செய்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நிபுணர் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் அடுத்தக்கட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x