Published : 15 Oct 2019 04:02 PM
Last Updated : 15 Oct 2019 04:02 PM
புதுடெல்லி
எடை குறைவான புத்தகப் பைகளை மட்டுமே பயன்படுத்தும் வகையில் விதிகளைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மாணவர்களுடைய புத்தகப் பைகளின் எடையைக் குறைத்துப் பயன்படுத்த வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளிகளில் மாணவர்கள் அதிக எடை கொண்ட புத்தகப் பைகளைப் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் டெல்லி அரசு புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ''அதிக எடை கொண்ட பைகள், வளரும் குழந்தைகளை உடல் ரீதியில் கடுமையாகப் பாதிக்கின்றன. இதனால் குழந்தைகளின் முதுகெலும்பும் முழங்கால்களும் சேதம் அடையலாம். அத்துடன் இரண்டு அல்லது அடுக்கு மாடிக் கட்டிடங்களில் இயங்கி வரும் பள்ளிகளில், மாணவர்கள் புத்தகப் பையுடன் மாடிப் படிகளை ஏற வேண்டியுள்ளது. இது குழந்தைகள் மனதில் பதற்றத்தையும் படபடப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.
எஸ்சிஇஆர்டி, என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள் வரையறுத்த பாடப் புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பள்ளிகள் பாதுகாப்பான குடிநீரை வழங்க வேண்டும். இதன்மூலம் வீட்டில் இருந்து மாணவர்கள் குடிநீரை எடுத்து வரவேண்டிய தேவை குறையும்'' என்று தெரிவித்தனர்.
பாடப் புத்தகங்கள், கைடுகள், வீட்டுப்பாடம் மற்றும் வகுப்புப் பாட நோட்டுகள், ரஃப் நோட்டு, தண்ணீர் பாட்டில், லஞ்ச் பாக்ஸ், பென்சில் பாக்ஸ் என புத்தகப் பையின் எடை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்வதாக எழும் குற்றச்சாட்டை அடுத்து, புதிய விதிமுறைகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT