Published : 06 Jul 2021 03:12 AM
Last Updated : 06 Jul 2021 03:12 AM
கரோனா சூழலை எதிர்கொள்ளும்வகையில் நடப்பு கல்வி ஆண்டில்10, 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை இரு பருவங்களை பிரித்து தேர்வு நடத்தும் புதிய நடைமுறையை சிபிஎஸ்இ அமல்படுத்த முடிவுசெய்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ இயக்குநர் (கல்வி) ஜோசப் இமானுவேல் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கரோனா தொற்று காரணமாக கடந்த கல்வி ஆண்டு (2020-2021) 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டன. புதிய முறையின்படி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் கரோனா பாதிப்பு அனுபவத்தை கருத்தில்கொண்டு நடப்பு கல்வி ஆண்டில் (2021-2022)மாற்று வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில்10 மற்றும் 12-ம் வகுப்பு பாடத்திட்டமானது இரு பருவங்களாக (தலா 50 சதவீதம்) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பருவ இறுதியிலும் தேர்வு நடத்தப்படும்.
இதில் அகமதிப்பீடு, செய்முறைத்தேர்வு, புராஜெக்ட் ஆகியவை நம்பத்தகுந்த முறையில் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதல் பருவத் தேர்வு நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும். இது,கொள்குறி வகையில் (அப்ஜெக்டிவ் டைப்) இருக்கும். இத்தேர்வு,வெளியில் இருந்து கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளியில் நடைபெறும்.
2-வது பருவத் தேர்வு மார்ச்-ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும். இதற்கான தேர்வு மையங்களை வாரியம் முடிவு செய்யும். இந்த தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையில் அமைந்திருக்கும். இரு பருவங்களில் எடுக்கப்படும் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு இறுதி மதிப்பெண் வழங்கப்படும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT