Published : 09 Sep 2021 03:14 AM
Last Updated : 09 Sep 2021 03:14 AM

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த - 150 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில்ரூ.100 கோடியில் புதிய வகுப்பறைகள் : அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 150 ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ரூ.100கோடி செலவில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் கட்டப்படும் என்று பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பதிலளித்துப் பேசிய பிறகு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

 ஆதிதிராவிடர் நலத் துறையின்கீழ் இயங்கி வரும் 150 பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.100 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டிடங்கள் கட்டப்படும்.

 ஆதிதிராவிடர் குடியிருப்பு களில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் 20 சமுதாய கூடங்கள் கட்டப்படும்.

 1,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்குதுரித இணைப்பு திட்டத்தின் (தட்கல்) கீழ் ரூ.23.28 கோடி செலவில் 90% மானியம் வழங்கப் படும்.

 காஞ்சி மாவட்டத்தில் வீடற்றஇருளர் இன பழங்குடியினருக்கு ரூ.13.29 கோடி செலவில் 443 புதிய வீடுகள் கட்டப்படும்.

 ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு விழா நாட் களில் வழங்கப்பட்டு வரும் சிறப்பு உணவுக் கட்டணம் இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.

 2 ஆயிரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நீர்ப்பாசனத்துக் கான பிவிசி குழாய்கள் வாங்கு வதற்கு தலா ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும். மேலும் 2 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க தலா ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

 5 ஆயிரம் தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடியில் தொழில் மேலாண்மை பயிற்சிகள் அளிக்கப்படும்.

 பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்ற பழங்குடியின பாரம்பரிய சமூக சுகாதார திறனாளர்கள் 100 பேருக்கு சுயமாக தொழில் தொடங்க தலா ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x