Published : 04 Sep 2021 03:14 AM
Last Updated : 04 Sep 2021 03:14 AM

கோடநாடு வழக்கில் இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க கோரி வழக்கு - காவல் துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு : வழக்கு விசாரணை செப்.27-க்கு தள்ளிவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை சாட்சிகளாக விசாரிக்க கோரிய வழக்கில் காவல் துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவில், ஓம் பகதூர் என்ற பாதுகாவலரை கொலைசெய்து, ஆவணங்கள் கொள்ளைஅடிக்கப்பட்டதாக சோலூர்மட்டம்காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர்பழனிசாமி, சசிகலா, ஜெ.இளவரசி,வி.என்.சுதாகரன், நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், மேல்கூடலூரை சேர்ந்த சுனில் ஆகிய 9 பேரை சாட்சிகளாக விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு,ஏ.சந்தோஷ்சாமி, வட்டணந்திராவை சேர்ந்த எம்.எஸ். சதீஷன் ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து கடந்தஏப்ரலில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஆகிய 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் முன்னாள் முதல்வருக்கு தொடர்பு இருப்பது பற்றி சயான் பேசியுள்ள நிலையில்,அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாக அதில் கூறப்பட்டது.

‘ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு நடைபெற்ற கொள்ளையில், கோடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல்போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்குத்தான் தெரியும். இந்த வழக்கில் புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணை நடத்தவில்லை. முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டனர்.

எனவே, இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலாஉள்ளிட்டோரை சாட்சிகளாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் கூடுதலாக சிலரை எதற்காக விசாரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை மனுதாரர்கள் விளக்க வேண்டும்.மேலும், 3 பேரின் வழக்கு குறித்துசோலூர்மட்டம் காவல் நிலையஆய்வாளர் 3 வாரங்களில் பதில்அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x