Published : 14 Aug 2021 03:18 AM
Last Updated : 14 Aug 2021 03:18 AM
‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக, விடுதலைப் போராட்ட வீரர்கள், தலைவர்களின் சிலைகளுக்கு சுதந்திர தினம், குடியரசு தினத்தில் மரியாதை செலுத்துமாறு அதிகாரிகளுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
`சுதந்திரம் மற்றும் குடியரசு தினங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் தலைவர்களின் சிலைகள்: அலங்கரித்து மரியாதை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என்ற தலைப்பில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று செய்தி வெளியாகியிருந்தது.
இதன் எதிரொலியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட உத்தரவு: நாட்டின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில், அரசின் சார்பில் நகரின் முக்கியப் பகுதிகளில் சிலைகளும், நினைவு மண்டபங்களும், நினைவுத் தூண்களும் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அவர்களது பிறந்த நாள் மற்றும் நினைவுநாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அதேபோல, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாவின்போதும் மாவட்டத் தலைநகரங்களில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிலைகளுககு அரசு சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செய்ய வேண்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT