Published : 25 Jun 2021 03:12 AM
Last Updated : 25 Jun 2021 03:12 AM

விடுபட்ட மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் : உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை

விடுபட்ட மாணவர்கள் அனைவருக்கும் இலவச லேப்டாப் விரைவில் வழங்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த காவுதீன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. இதில் 2017 - 2018 ஆண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் 2018 முதல் 2021 வரை மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முந்தைய கல்விஆண்டு மாணவர்களுக்கு லேப்டாப் தரவில்லை. எனவே, 2017- 2018 ஆண்டு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தர உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், விடுபட்டுள்ள மாணவர்களுக்கு வழங்குவதற்காக லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இருப்பினும் மாணவர்களின் படிப்புக்கு லேப்டாப் அவசியமானது. இதனால் விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் தர அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x