Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM
கரோனா பெருந்தொற்று காலத்தில் மன உளைச்சலுடன் பணிபுரிந்து வரும் போலீஸாரை மிரட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சி தெப்பக்குளத்தான்கரையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் முகக்கவசம் அணியாமல் ஆட்டோவில் சென்றனர். ரோந்து போலீஸார் அவர்களை நிறுத்தி முகக்கவசம் அணியாமல் போனது குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் போலீஸாரை ஆபாசமாகப் பேசி தாக்க முயன்றனர். இந்த வழக்கில் போலீஸார் தேடி வரும் காஜா என்பவர், முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. கூடுதல் அரசு வழக்கறிஞர் எஸ்.ரவி வாதிடுகையில், போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 2 பேரை தேடி வருகின்றனர் என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பெருந்தொற்று காலத்தில் போலீஸார் ஏற்கெனவே கடும் மன உளைச்சலுடன் பணிபுரிகின்றனர். கரோனா கிருமி அப்பாவி மனிதர்களின் விலை மதிக்க முடியாத உயிர்களைப் பறித்து வரும் சூழலை ஒவ்வொருவரும் உணர வேண்டும். முழு ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் சுற்றித் திரிபவர்களை நிறுத்தி போலீஸார் கேள்வி கேட்கும்போது, சம்பந்தப்பட்டவர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும்.
அதை விடுத்து போலீஸாரை ஆபாசமாகப் பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. இதுபோன்ற செயல்களை கடுமையாக அணுக வேண்டும். கரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரியும் போலீஸாரை மிரட்டுபவர்கள் மீது நீதிமன்றம் கருணை காட்ட முடியாது.
மனுதாரர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டேன் என உறுதியளித்தும் பதிவாளரிடம் கடிதம் தர வேண்டும். மேலும் வழக்கறிஞர்கள் எழுத்தர்கள் சங்கத்துக்கு மனுதாரர் ஜூன் 11-க்குள் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.இந்தஉத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக ஜூன் 14-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை மனுதாரரை கைது செய்யக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT