Published : 25 Apr 2021 06:09 AM
Last Updated : 25 Apr 2021 06:09 AM

தமிழகத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது - தினசரி கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்கியது : ஒரே நாளில் முதியவர்கள் உட்பட 80 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியது. சென்னையில் 31,506 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 668 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் முதியவர்கள் உட்பட 80 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 8,874, பெண்கள் 5,968 என மொத்தம் 14,842 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 43 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 4,086, செங்கல்பட்டில் 1,163, கோவையில் 1,004, திருவள்ளூரில் 793 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 66,329 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 69,526 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 52,186 பேர் குணமடைந்துள்ளனர்.

9,142 பேர் வீடு திரும்பினர்

சென்னையில் 3,667 பேர் உட்படதமிழகம் முழுவதும் 9,142 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

சென்னையில் 31,506 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 668 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 80 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 25 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13,475 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,538 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 3 லட்சத்து 5,570,செங்கல்பட்டில் 72,706, கோவையில் 72,174, திருவள்ளூரில் 54,790 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

தமிழகத்தில் 263 அரசு, தனியார்ஆய்வகங்களில் இதுவரை 2 கோடி 18 லட்சத்து 80,174 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 25,718 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்துக்கு 4 லட்சம் தடுப்பூசிகளைமத்திய அரசு அனுப்பியது

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 ஆயிரம் மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அனுப்பி வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், உடனே 15 லட்சம் டோஸ் கோவிஷீல்டு, 5 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகளை அனுப்புமாறு மத்திய அரசிடம் மாநில அரசு கடந்த வாரம் கேட்டது. முதலில் 1 லட்சம் டோஸ் கோவேக்சின், அடுத்ததாக 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு, நேற்று முன்தினம் 2 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன.

இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் இருந்து 2 லட்சம் டோஸ் கோவேக்சின், புனேவில் இருந்து 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அவற்றை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைத்து மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடக்கிறது. தமிழகத்துக்கு இதுவரை57 லட்சம் டோஸ் கோவிஷீல்டு, 12.82 லட்சம் கோவேக்சின் என 69.82 லட்சம் தடுப்பூசியை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதில், 52 லட்சம் டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x