Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM

அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டை அதிமுக அரசே ஒப்புக் கொண்டது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல்

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டை அதிமுக அரசே ஒப்புக்கொண்டு விட்டது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக சார்பில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பரப்புரை நிகழ்ச்சி,கோவை கொடிசியா அரங்கு அருகேயுள்ள மைதானத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் எம்எல்ஏ, பையா (எ) கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் அளித்த மனுக்களை ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்ட 10 பேருக்கு பாராட்டுச் சான்றிதழை ஸ்டாலின் வழங்கி பேசியதாவது:

அதிமுக அரசால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை, எனது அரசு அமைந்ததும், 100 நாட்களில் தீர்த்து வைப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளேன். இன்னும் 3 மாதத்தில் நடக்க உள்ளஆட்சி மாற்றம், உங்கள் குறைகளை களையும். இதற்காக தமிழகஅரசில் தனித்துறை உருவாக்கப்படும்.

அந்த துறையின் மூலம், மாவட்ட ரீதியாக இந்த மனுக்களை பரிசீலித்து உடனடியாக நிறைவேற்றித் தருவோம். அதிமுக செய்யத் தவறிய கடமையை, திமுகஅரசு நிச்சயம் செய்யும். இந்தகடமையை திமுக செய்து முடிக்கும்போது, தமிழகத்தில் ஒரு கோடிகுடும்பங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கும்.

ஊழலாட்சித் துறை அமைச்சர்

தற்போது தமிழகத்தில், சிலஊழல்வாதிகள் சேர்ந்து, தாங்கள்சம்பாதிக்க அரசாங்கம் என்ற ஊழல் கோட்டையை எழுப்பியுள்ளனர். இதில் முக்கிய நபர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. சுண்ணாம்பு பவுடர், பினாயில் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதிலும் ஊழல் செய்தவர் அவர். ஒரு ஊராட்சியில் ஒரு கோடி ரூபாய் என தமிழகம் முழுவதும் உள்ள 12,600 ஊராட்சிகளில் ரூ.12,600 கோடி அரசாங்க பணத்தை சுரண்டியவர்.

அவர் மீதான எல்.இ.டி தெருவிளக்கு பொருத்துவதில் நடந்தஊழல் குறித்த வழக்கு சென்னைஉயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த ஊழல் நடக்கவில்லை என அரசு கூறவில்லை. எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு லோக் ஆயுக்தாவுக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டை இந்த அரசே ஒப்புக்கொண்டுவிட்டது. கோவையின் அமைச்சராக எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் எஸ்.பி.அன்பரசன் செயல்படுகிறார்.

அமைச்சரின் சகோதரர், பினாமிகள் தவிர மற்ற யாரும் டெண்டர் எடுக்க முடியாது. பினாமி நிறுவனங்களை வைத்து கோவை மாநகராட்சியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் சுரண்டிஉள்ளனர்.

வழக்குகள் பாயும்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், சில நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பது குறித்த, வலுவான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது, திமுக ஆட்சி அமைந்ததும் நிச்சயம் வழக்குகள் பாயும். பணத்தை கொடுத்து ஓட்டுவாங்கிவிடலாம் என வேலுமணிநினைக்கிறார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெற வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x