Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM

திமுகவில் 2-வது நாளாக விருப்ப மனு விநியோகம் திருக்கோவிலூருக்கு பொன்முடி மனு

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 2-வது நாளாக ஆயிரத்துக்கும் அதிகமானோர் விருப்ப மனு பெற்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர், பிப்ரவரி 17 முதல் 24-ம் தேதி வரை சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.

ரூ.1,000 செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து ரூ.25 ஆயிரம் கட்டணத்துடன் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தனி தொகுதிகளுக்கும், பெண்களுக்கும் ரூ.15ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளான நேற்று முன்தினம்1,000-க்கும் அதிகமானோர் விருப்ப மனு பெற்றனர். அதில் 300-க்கும் அதிகமானோர் விருப்ப மனுவை பூர்த்தி செய்து அளித்தனர்.

2-வது நாளான நேற்றும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் விருப்ப மனு பெற்றனர். அதில் 200-க்கும்அதிகமானோர் மனுவை பூர்த்தி செய்து அளித்துள்ளதாக திமுகஅலுவலக நிர்வாகிகள் கூறினர்.

திமுக துணை பொதுச் செயலாளர் க.பொன்முடி, திருக்கோவிலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் விருப்ப மனு அளித்தார். திருக்கோவிலூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி போட்டியிட வலியுறுத்தியும் பொன்முடி விருப்ப மனுஅளித்தார். அப்போது தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மனு அளித்தார்.

காட்பாடி தொகுதியில் ஸ்டாலின், உதயநிதி, துரைமுருகன் போட்டியிட அத்தொகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் மனு அளித்தனர். 234 தொகுதிகளிலும் ஸ்டாலின், உதயநிதி போட்டியிட வலியுறுத்தி திமுக நிர்வாகிகள் மனு அளித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x