Published : 06 Feb 2021 03:16 AM
Last Updated : 06 Feb 2021 03:16 AM

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டவயல்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஜனவரி மாதம் பெய்த தொடர் மழை காரணமாக, லட்சக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், உளுந்து,துவரை, நிலக்கடலை உள்ளிட்ட அனைத்து வகை பயிர்களும் பெருமளவில் சேதமடைந்தன. இதனால், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களை பார்வையிடுவதற்காக மத்திய மீன்வள மேம்பாட்டு ஆணையர் பால்பாண்டியன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக மண்டல அலுவலர் ரணன்ஜெய்சிங், மத்திய மின்சாரக் குழும உதவி இயக்குநர் சுபம் கார்க் ஆகியோர் வந்தனர். அவர்கள் முதல் கட்டமாக நேற்று முன்தினம் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வயல்களில் ஆய்வு செய்து, விவசாயிகளிடம் பயிர்ச் சேத விவரங்களை கேட்டறிந்தனர்.

2-வது நாளாக ஆய்வு

தொடர்ந்து, 2-வது நாளான நேற்று நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கருங்கண்ணி பகுதியில் பயிர்ச் சேதங்களை ஆய்வு செய்த அவர்கள், வேளாண்மைத் துறை சார்பில் அங்கு அமைக்கப்பட்டிருந்த பயிர்ச் சேதம், பருவம் தவறி பெய்த மழையளவு குறித்த பதாகையை பார்வையிட்டனர். அப்போது, பயிர்ச் சேதம் மற்றும் மழையளவு குறித்து, மத்தியக் குழுவினரிடம் ஆட்சியர் பிரவீன் பி.நாயர் விளக்கம் அளித்தார்.

பின்னர், நாகை அருகே பாலையூர் பகுதியில் சேதமடைந்த நெற்பயிர்களை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர். ஆய்வின்போது, அனைத்து பகுதிகளிலும் பயிர்ச் சேத விவரம் குறித்து விவசாயிகளிடம் மத்தியக் குழுவினர் கேட்டறிந்தனர். அப்போது, சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்துக்குச் சென்ற மத்தியக்குழுவினர், அங்கு திருவிளை யாட்டம், அன்னப்பன்பேட்டை பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களையும், கேதிப்பேட்டையில் நிலக்கடலைப் பயிர்களையும் பார்வையிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x