Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்: புதிய தொழில் கொள்கைக்கு அனுமதி; ரூ.52,257 கோடி முதலீட்டில் 34 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல்

முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.52,257 கோடியில் 34 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதுடன், ‘தமிழ்நாடு தொழில் கொள்கை - 2021’ வெளியிடவும் அனுமதியளிக்கப்பட்டது.

வரும் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதற்கிடையில், ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி 6.15 வரை நடைபெற்றது. இதில், இடைக்கால பட்ஜெட் மற்றும் ஆளுநர் உரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொருளாதாரத்தை சீரமைக்க அமைக்கப்பட்ட ரங்கராஜன் குழுவின் பரிந்துரைகள், கரோனா காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு நேற்று அளித்த அறிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

முதல்வர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் 34 முக்கிய முதலீடுகளுக்கு ஒப்புதல் அளித்ததுடன், புதிய தொழில் கொள்கையை வெளியிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 34 திட்டங்கள் மூலம் ரூ.52,257 கோடி முதலீடு மற்றும் 93,935 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது.

முக்கிய தொழில் திட்டங்கள்

டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.5,763 கோடி முதலீட்டில் 18,250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கிருஷ்ணகிரியில் கைபேசி உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டம்.

தைவானின் பெகாட்ரான் கார்ப்பரேஷன் ரூ.1,100 கோடி முதலீட்டில் 14,079 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் செங்கல்பட்டில் கைபேசிகள் உற்பத்தி திட்டம்.

தைவான் நாட்டின் லக்ஸ்ஷேர் நிறுவனம் ரூ.745 கோடியில் 4,000 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் காஞ்சிபுரம், பெரும்புதூரில் மின்னணு வன்பொருள் உற்பத்தி திட்டம்.

சன் எடிசன் நிறுவனம் ரூ.4,629 கோடி முதலீட்டில் 5,397 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் சூரிய ஒளி மின்னணுத் தொகுதி உற்பத்தி திட்டம்.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சார்பில் ரூ.2,354 கோடியில் 2,182 பேருக்கு வேலை அளிக்க கிருஷ்ணகிரி பர்கூர் சிப்காட் தொழிற்பூங்காவில் மின் வாகனங்கள், மின்னேற்றிகள் உற்பத்தி திட்டம்.

ஜெர்மனியை சேர்ந்த எய்க்காப் விண்டு நிறுவனம் சார்பில் ரூ.621 கோடியில் 319 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் சென்னை அருகே காற்றாலை மின்சக்தி திட்டம்.

ஜெர்மனியின் பிஏஎஸ்எப் நிறுவனம் சார்பில் ரூ.345 கோடியில் 235 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் செங்கல்பட்டில் மோட்டார் வாகன உமிழ்வு வினையூக்கிகள் உற்பத்தி திட்டம்.

லூகாஸ் டிவிஎஸ் சார்பில் ரூ.2,500 கோடி முதலீட்டில் 3,500 பேருக்கு வேலை அளிக்கும் விதமாக திருவள்ளூரில் லித்தியம் அயன் மின்னேற்றிகள் உற்பத்தி திட்டம்.

ஜப்பானை சேர்ந்த டெய்செல் கார்ப்பரேஷன், காற்றுப் பைகளில் காற்றடைக்கும் கருவி உற்பத்தி திட்டத்தை, செங்கல்பட்டு மாவட்டம் ஒன் ஹப் சென்னை தொழிற்பூங்காவில் ரூ.358 கோடி முதலீட்டில் 180 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் நிறுவுகிறது.

கொரியாவின் எல்.எஸ்.ஆட்டோமோட்டிவ் நிறுவனம் சார்பில் ரூ.250 கோடியில் 200 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் திருவள்ளூரில் வாகன ஸ்விட்ச்கள் உற்பத்தி திட்டம்.

அமெரிக்காவின் ஆட்டோலிவ் கார்ப்பரேஷன் சார்பில் ரூ.100 கோடியில் 400 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் திருவண்ணாமலை சிப்காட் செய்யாறு தொழிற்பூங்காவில் வாகன பயணிகளின் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி திட்டம்.

டேட்டா பேட்டன்ஸ் நிறுவனம் ரூ.303 கோடியில், 703 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் தமிழக பாதுகாப்பு தொழில் பெருவழிச்சாலை, சென்னை முனையத்தில், பாதுகாப்பு, விண்வெளி தொடர்பான தயாரிப்புகள் திட்டம்.

முதலீட்டாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு தொகுப்பு சலுகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சில முதலீடுகளில் பூர்வாங்கப் பணிகளை தொடங்க ஏதுவாக தொகுப்பு சலுகை இல்லாத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்போது அமைச்சரவை ஒப்புதலுடன் சட்டப்பூர்வ பிணைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படும். அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட தமிழ்நாடு தொழில் கொள்கை - 2021 விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x