Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

டெல்லியில் போராடும் விவசாயிகளிடம் பிரதமர் நேரடியாகப் பேச வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் நேரடியாக அழைத்துப் பேச வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கோவைக்கு நேற்று வந்த மு.க.ஸ்டாலின், பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மேட்டுப்பாளையம் இயற்கை விவசாயி பாப்பம்மாளுக்கு(105) வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்றம் மற்றும் பல்வேறுகட்சிகளைச் சேர்ந்த 200 பேர், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இன்னும் 3 மாதங்களில் அதிமுக ஆட்சி முடியப் போகிறது. அடுத்து வரும் தேர்தலில், இந்த ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 60 நாட்களாக அமைதியான முறையில் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். வெறும் கண்துடைப்புக்காக மத்திய அரசு விவசாயிகளை அழைத்துப் பேசியது. இந்த சட்டங்களை திமுக எதிர்த்தது. ஆனால், அதிமுக ஆதரவு தெரிவித்து, அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த உதவியது. அதிமுக மட்டும் ஆதரவளித்திருக்காவிட்டால், இந்த சட்டங்கள் நிறைவேறியிருக்காது.

விவசாயிகள் அனுமதி பெற்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தினர். ஆனால், காவல் துறையைக் கொண்டு விவசாயிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது மத்திய அரசு. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, பிரதமரே நேரடியாக அழைத்துப் பேச வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x