Published : 27 Dec 2020 03:14 AM
Last Updated : 27 Dec 2020 03:14 AM

பிரிட்டனில் இருந்து வந்த மேலும் 5 பேர் உட்பட புதிதாக 1,019 பேருக்கு கரோனா உறுதி முதியவர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக பிரிட்டனில் இருந்து வந்த மேலும் 5 பேர் உட்பட 1.019 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 622, பெண்கள் 397 என மொத்தம் 1,019 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதிகபட்சமாக சென்னையில் 295, கோவையில் 93 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 13,161 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 17,155 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 92,063 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 272 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,098 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 2,951 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 9,039 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 6 பேர், தனியார் மருத்துவமனைகளில் 5 பேர் என நேற்று 11 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 5 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,059 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்து சென்னை வந்த இளைஞருக்கு கரோனா தொற்று உறுதியானதால், சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் உள்ள அரசு கரோனாமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் சென்னை, மதுரையில் தலா ஒருவர்,தஞ்சாவூரில் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில், பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் நேற்று புதிதாக சென்னையில் 2 பேர், தஞ்சாவூர், தேனி, நீலகிரியில் தலா ஒருவர் என 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம், பிரிட்டனில் இருந்துதமிழகம் வந்த 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது சளி மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

புதிய வைரஸா? நாளை தெரியும்

“பிரிட்டனில் இருந்து சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த இளைஞர் தினேஷின் பரிசோதனை முடிவுகள் 28-ம் தேதி (நாளை) கிடைக்கும். மற்ற 4 பேரின் பரிசோதனை முடிவுகள் வர 4 நாட்கள் ஆகும். பரிசோதனை முடிவுகள் வந்தால்தான் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பா என்பது தெரியவரும். கடந்த நவ.25-ம் தேதி முதல் பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்கள் கண்டிப்பாக கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’’ என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர். பிரிட்டனில் இருந்து சென்னை வந்த 2,500-க்கும் மேற்பட்டோரை கண்டறிந்து பரிசோதனை செய்யும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x