Published : 16 Dec 2020 03:14 AM
Last Updated : 16 Dec 2020 03:14 AM

வாக்குச்சாவடிகளை அதிகரிக்க திட்டம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20.62 லட்சம் பேர் விண்ணப்பம் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 20 லட்சத்து 62,424 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல்திருத்தப்பணிகள் கடந்த நவ.16-ம் தேதிதொடங்கப்பட்டது. பெயர்களை சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது உள்ளிட்டவற்றுக்கு இணையதளம் வாயிலாகவும் நேரடியாக தாலுகா அலுவலகங்களிலும் விண் ணப்பங்களை அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர, நவம்பர் 21, 22 மற்றும்டிசம்பர் 12, 13 ஆகிய நாட்களில் தமிழகத்தில் உள்ள 68,324 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மூலம் 11 லட்சத்து 71,660 மனுக்கள் பெறப்பட்டன. நேரடியாகவும், இணையதளத்திலும் பெறப்பட்டது உட்பட மொத்தம் 29 லட்சத்து 72,899 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறிய தாவது: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் காலத்தில் 29 லட்சத்து 72,899 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பதற்காகவும் ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறினால் அதற்காகவும் படிவம் 6 ஐ 20 லட்சத்து 62,424 பேர் அளித்துள்ளனர். பெயர் நீக்கம் மற்றும் ஆட்சேபங்கள் தெரிவித்து 3 லட்சத்து 99,31 பேரும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பாக 3 லட்சத்து 27,991 பேரும் தொகுதிக்குள்ளேயே முகவரி மாற்றம் செய்ய 1 லட்சத்து 83,253 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும். மேலும், தற்போது சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களிக்க வசதியாக, வாக்குச்சாவடிக்கான வாக்காளர் எண்ணிக்கையை குறைத்து, கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பணிகள் தொடக்கம்

இதற்கிடையில், தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை பணிகள் மாவட்ட வாரியாக தொடங்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பெயர்கள் மற்றும்அவர்கள் வசிக்கும் தொகுதி, வாக்காளர் அடையாள அட்டை விவரங்கள்சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங் களால் பெறப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x