Published : 04 Dec 2020 03:15 AM
Last Updated : 04 Dec 2020 03:15 AM

4-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிப்பு ஜெயலலிதா கனவுகளை சத்தியமாக்க சபதம் ஏற்போம் அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் கடிதம்

ஜெயலலிதாவின் நினைவு நாளில் அவரது கனவுகளையும், லட்சியங்களையம் சத்தியமாக்கிட வீர சபதம் எடுப்போம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:

அதிமுகவே உலகம் என வாழும் தொண்டர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் டிச.5-ம்தேதி கருப்புநாளாகும். ‘எம் மக்கள் யாரிடத்திலும் எதற்காகவும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவேன்’ என்ற லட்சியத்தை சுமந்த, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நம்மைவிட்டு பிரிந்தாலும், நம்மிடம் அவர் ஒப்படைத்துப்போன ஆட்சியை இன்று இந்தியாவே புகழும் நல்லாட்சியாக நடத்தி வருகிறோம்.

சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்துகொள்ளாத ஆளுமைத் திறன், எது வரினும் எதிர்கொள்ளும் நெஞ்சுரம், சாதி, மத அரசியலுக்கு இடம்கொடுக்காத தீர்க்கம் என உயரிய நிர்வாகப் புரட்சியால் தமிழகத்தை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக உயர்த்தியவர் ஜெயலலிதா. எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த வழித் தடத்தில் அதிமுக அரசு வெற்றிநடைபோட்டு வருகிறது. ‘எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்’ என்று ஜெயலலிதா ஓங்கி ஒலித்த கடைசி சூளுரையை கடுகளவும் குன்றாது காப்பாற்றுவதே நாம் அவருக்கு ஆற்றவேண்டிய நன்றிக் கடனாகும்.

அடுக்கடுக்கான வழக்குகளைப் போட்டு, ஜெயலலிதாவை நீதிமன்றத்துக்கு அலைய வைத்து, அவரது ஆரோக்கியத்தை குலைத்து, அவரது ஆயுளையே பறித்தவர்கள்தான், இன்று ஸ்பெக்ட்ரம் பணத்தை வைத்து அதிகாரத்தை அபகரித்துவிடலாம் என்று அலைகின்றனர். அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டிய பொறுப்பு நமக்கே உரியதாகும்.

தமிழகத்தை தலையாய மாநிலமாக உயர்த்துவதையே லட்சியமாகக் கொண்டு உழைக்கும் இயக்கம் அதிமுக. அதே நேரம், கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்டு அதிகார வெறிபிடித்து அலையும் சதிகாரக் கூட்டத்தை வேரறுத்து வென்று காட்ட, ஜெயலலிதா மறைந்த இந்த நாளில், அவரது உருவப் படத்துக்கு டிச.5-ம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு விளக்கேற்றி வைத்து, அவரது கனவுகளையும், லட்சியங்களையம் சத்தியமாக்கிட வீர சபதம் எடுப்போம்.

பொதுவாழ்வு என்பது அதிகாரத்தை அபகரிப்பது அல்ல. வறியோரின் முகத்தில் வந்து அமரும் புன்னகைக்காக நெறியோடு உழைப்பதும், நேர்த்தியோடு நடப்பதும், உத்தமர்கள் வழியில் ஓய்வின்றி உழைப்பதுமே, கழகத் தொண்டனின் கடமை என்று ஜெயலலிதா பேரில் சபதம் ஏற்போம். எங்கள் உயிர்மூச்சு உள்ளவரை ஜெயலலிதா வழியில் மக்களைக் காப்போம் என, இந்நாளில் சூளுரை ஏற்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x