Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM
காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், மூத்த தலைவருமான அகமது படேல் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட இரங்கல்செய்திகள் வருமாறு:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: காங்கிரஸ் கட்சியின் முக்கியதலைவர்களுள் ஒருவரான அகமது படேல் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அவரதுபிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், பொருளாளர், எனது30 ஆண்டு கால நண்பர் அகமது படேலின் மறைவு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவருடைய உடல், உள்ளத்தின் ஒவ்வொரு அணுவிலும் நாட்டுப்பற்றும் மதச்சார்பின்மையும் ஊடுருவி இருந்தன. 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத வலுவான தூணாக அகமது படேல் விளங்கினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அரசியல் செயலாளராக பணியாற்றி, உறுதுணையாக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேலின் மறைவு செய்தி கேட்டுமிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். கட்சியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுஉட்பட பல்வேறு பொறுப்புகளை ஏற்று மிக சிறப்பாக செயல்பட்டவர். 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவர். அவரது மறைவு காங்கிரஸுக்கு ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அகமது படேலின் மறைவுகாங்கிரஸ் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் அன்போடும், நட்போடும் பழகக் கூடியவர். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர்தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் அகமது படேல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT