Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM

தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில் இயல்பைவிட அதிகமாக மழைப் பொழிவு

சென்னை: தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாகப் பெய்ததால், சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, கிருஷ்ணகிரி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டின. மேட்டூர், பவானிசாகர், பாபநாசம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைகளில் கணிசமான அளவு நீர்இருப்பு உள்ளது.

இந்தாண்டு தென்மேற்குப் பருவமழைக் காலம் கடந்த செப்.30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இப்பருவமழைக் காலத்தில் 42 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது (இயல்பான மழை 34 செ.மீ.) 24 சதவீதம் அதிகமாகும். சென்னையில் வழக்கத்தைவிட ஒரு சதவீதம் (இயல்பான மழை 44 செ.மீ.) அதிகமாகப் பொழிந்துள்ளது. இதனால், சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, கிருஷ்ணகிரி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டின. மேட்டூர், பவானிசாகர், பாபநாசம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைகளில் கணிசமான அளவு நீர்இருப்பு உள்ளது.

இப்பருவமழைக் காலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்ததால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி, குறித்த நேரத்தில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நெல் சாகுபடியும் முழுவீச்சில் நடைபெற்றது. மேலும், இந்தாண்டு 3 தடவை மேட்டூர் அணையின் நீர்மட்டம்100 அடியை (செப்.25, அக்.13, அக்.24) எட்டியது.

வடகிழக்குப் பருவமழை நிலவரம்

தமிழ்நாட்டுக்கு 60 சதவீதம் மழையைத் தரும் வடகிழக்குப் பருவமழை அண்மையில் தொடங்கியுள்ளது. இப்பருவமழை வட தமிழகத்தில் இயல்பையொட்டியும், தென் தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு பெரும்பாலான அணைகளில் தண்ணீர் இருப்புஅதிகமாக இருப்பதால் குடிநீருக்கோ, பாசனத்திற்கோ தண்ணீர் தட்டுப்பாடுஇருக்காது என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x