Published : 17 May 2024 03:49 PM
Last Updated : 17 May 2024 03:49 PM

ஐபிஎல் | மழையால் ஹைதராபாத் -  குஜராத் ஆட்டம் ரத்து: பிளே ஆஃப் சுற்றில் யாருக்கு பயன், பாதிப்பு

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வியாழக்கிழமை (மே 16) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையின் காரணமாக டாஸ் போடாமல் கைவிடப்பட்டது. இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் நடப்பு தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இது கடைசி லீக் ஆட்டமாக அமைந்தது. அந்த அணி 14 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பெற்று தொடரில் இருந்து வெளியேறியது.

மழையால் ஹைதராபாத்தில் ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் இருந்த கொஞ்ச வாய்ப்பும் பறிபோனது. இதனால் அந்த அணி தொடரில் இருந்து வெளியேறியது உறுதியானது. இரண்டாவது, புள்ளிபட்டியலில் சன்ரைசர்ஸ் இரண்டாமித்தை பிடிப்பது தற்போது ராஜஸ்தான் - கொல்கத்தா ஆட்டத்தை பொறுத்தே அமையும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றிபெற்று, ஞாயிற்றுகிழமை பஞ்சாப்பை எதிர்கொள்ளும் சன்ரைசர்ஸ் அதில் வெற்றிபெற்றால் சன்ரைசர்ஸ் இரண்டாமிடம் பிடிக்கும். மாறாக ராஜஸ்தான் வெற்றிபெற்றால் அந்த அணியே இரண்டாமிடம் பிடிக்கும்.

ஆர்சிபி… ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 ஆட்டங்களில் விளையாடி 0.387 நிகர ரன் ரேட்டுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கேவுடன் மோதுகிறது. சிஎஸ்கே ஏற்கெனவே 0.528 நிகர ரன் ரேட்டுடன் 14 புள்ளிகளை கொண்டுள்ளது. இதனால் சிஎஸ்கே அணியை அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்த வேண்டும். இது நிகழ்ந்தால் மட்டுமே பெங்களூரு அணியால் பிளே ஆஃப் வாய்ப்பை பெற முடியும். உதாரணமாக பெங்களூரு அணி 200 ரன்கள் குவித்தால் குறைந்தது 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில் 200 ரன்கள் இலக்கை துரத்தினால் 18.1 ஓவரில் வெற்றி பெற வேண்டும்.

ஒருவேளை சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால், அப்போதும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு கடைசியாக ஒரு வாய்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பை சன்ரைசர்ஸ் - குஜராத்தின் நேற்றைய ஆட்டம் தகர்த்தது.

சிஎஸ்கே: 13 ஆட்டங்களில் விளையாடி சிஎஸ்கே 0.528 நிகர ரன் ரேட்டுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ளது. வரும் சனிக்கிழமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி தகுதி பெற்றுவிடும். ஒருவேளை இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும் நிகர ரன் ரேட் பாதிக்கப்படாமல் சிஎஸ்கே அணி பார்த்துக்கொள்ள வேண்டும். சிஎஸ்கே புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடம் பிடிக்க வாய்ப்புள்ளதா என்று கேட்டால், சிறிய வாய்ப்பே உள்ளது. வரவிருக்கும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணியும், ராஜஸ்தான் அணியும் தோற்றால் சிஎஸ்கே இரண்டாமிடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x